தன் மீது அவதூறான குற்றச்சாட்டை வைத்ததற்கு 72 மணி நேரத்தில் அமித் ஷா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று திரணமூல் காங்கிரஸ் எம்பி அபிஷேக் பானர்ஜி நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
மேற்கு வங்க மாநிலத்தில் ஆகஸ்ட் 11-ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா பங்குபெற்று பேசினார். அந்த கூட்டத்தில், "மேற்கு வங்க மாநிலத்துக்காக பிரதமர் ஒதுக்கிய 3.59 லட்சம் கோடி ரூபாய் வந்து சேர்ந்ததா? அந்த 3,59,000 கோடி ரூபாய் எங்கே சென்றது? அது உறவினருக்கும் கூட்டமைப்புக்கும் பரிசாக வழங்கப்பட்டுவிட்டது" என்றார்.
மம்தா பானர்ஜியின் உறவினராக திரிணமூல் காங்கிரஸ் கட்சி எம்பி அபிஷேக் பானர்ஜியை தான் அந்த உரையில் அமித் ஷா குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், அமித் ஷாவுக்கு அபிஷேக் பானர்ஜி திங்கள்கிழமை நோட்டீஸ் அனுப்பினார். அதில், "பாஜக தேசிய தலைவர் என் பெயரை கெடுக்கும் நோக்குடன் பேசியுள்ளார். 72 மணி நேரத்தில் அமித் ஷா தனது கருத்துக்கு மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையெனில், அவர் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்று கூறப்பட்டிருந்தது.