கேரளாவில் ஏற்பட்டுள்ள கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக பல்வேறு மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளித்து வருகின்றன.
மாநிலம் முழுவதும் 60 ஆயிரத்துக்கும் அதிகமானோர் 1,750 தற்காலிக நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
மழை, வெள்ளம் மற்றும் மண் சரிவால் மாநிலம் முழுவதும் இதுவரை 37 பேர் உயிரிழந்தனர். 1,500 வீடுகள் பலத்த சேதம் அடைந்தன. இதில் 101 வீடுகள் முழுவதுமாக இடிந்து விழுந்துள்ளன.
வெள்ளம் சூழ்ந்த மாவட்டங்களில் ராணுவ வீரர்கள், கடலோர காவல்படை, விமானப்படை, தேசிய மற்றும் பேரிடர் மீட்பு படையினர், தீயணைக்கும் படையினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், சுதந்திர தினத்தையொட்டி செய்தியாளர்களைச் சந்தித்த அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் கூறியதாவது:
கேரள வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிலான மிகப்பெரிய இழப்பை தற்போது நாம் காண்கிறோம். அனைத்து அணைகளும் திறந்துவிடப்பட்டுள்ளது. மாநிலத்தின் பெரும்பாலான நீர்மேலாண்மை அமைப்புகள் வெள்ளத்தில் மூழ்க்கியுள்ளன. அதன் மோட்டார்களும் பழுதடைந்துள்ளன.
அனைத்து அதிகாரிகளும் தீவிர மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். அடுத்த 4 நாட்களுக்கும் மழை தொடர உள்ளதால் நாம் அனைவரும் எச்சரிக்கையுடன் இருப்பது மிக அவசியம். பிற மாநிலங்களும் நமக்கு உதவி செய்து வருகின்றன. பிற்காலத்திலும் அவர்களின் உதவி நமக்கு தேவைப்படுகிறது என்றார்.
முன்னதாக, கேரளாவில் நடைபெற இருந்த சுதந்திர தின கொண்டாட்டங்கள் ரத்து செய்யப்பட்டு, அதன் முழு நிதியும் வெள்ள நிவாரணங்களுக்கு செலவு செய்யப்படும் என்று கேரள அரசு அறிவித்திருந்தது.