சுதந்திர தினத்திலாவது பிரதமர் உண்மையை பேசி இருக்கலாம்: காங்கிரஸ் விமர்சனம்

பிரதமரின் சுதந்திர தின உரை ஒன்றுமற்ற வெற்றுப் பேச்சு; பிரதமர் தனது கடைசி சுதந்திர தின உரையிலாவது உண்மையை பேசியிருக்கலாம் என்று காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது.


பிரதமரின் சுதந்திர தின உரை ஒன்றுமற்ற வெற்றுப் பேச்சு; பிரதமர் தனது கடைசி சுதந்திர தின உரையிலாவது உண்மையை பேசியிருக்கலாம் என்று காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது.
இதன் மூலம், அடுத்த தேர்தலுக்குப் பிறகு மோடி பிரதமராக இருக்க மட்டார் என்று காங்கிரஸ் மறைமுகமாக கூறியுள்ளது. தில்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் புதன்கிழமை செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரண்தீப் சுர்ஜேவாலா இது தொடர்பாக மேலும் கூறியதாவது:
பிரதமர் மோடியின் சுதந்திர தின உரையில் ஒரு வார்த்தை கூட அர்த்தமுள்ளதாகவோ, சாமானிய மக்களுக்கு நன்மை தரக்கூடியதாகவோ இல்லை. நல்ல நாள்கள் வரும் என்று நம்பிவாக்களித்த மக்களுக்கு இந்த ஆட்சி இருக்கும் வரை அந்த நாள்கள் வராது என்பதுபோல சுதந்திர தின உரை இருந்தது. நாட்டு மக்கள் சத்தியத்தின் நாள்களுக்காக காத்திருக்கிறார்கள். பிரதமர் பதவியில் இருந்து மோடி விலகும் நாள்தான் சத்தியத்தின் நாளாக இருக்கும்.
கடந்த 2013-ஆம் ஆண்டு சுதந்திர தினத்தின்போது சத்தீஸ்கரில் செங்கோட்டை போல ஒரு மாதிரி இடத்தை அமைத்துக் கொண்டு, அப்போதை பிரதமர் மன்மோகன் சிங்குக்கு மோடி சவால் விடுத்தார். அப்போது ஊழல், சீனா, பாகிஸ்தானால் எல்லையில் ஏற்படும் அச்சுறுத்தல், பொருளாதார சுணக்கம், ரூபாய் மதிப்பு வீழ்ச்சி, வேலையின்மை, விவசாயிகள், பெண்கள் நிலை குறித்து தன்னுடன் விவாதிக்க தயாரா? என்று மோடி கேள்வி எழுப்பினார்.
இப்போது நாங்கள் பிரதமரிடம் கேள்வி கேட்கிறோம். அவர் கூறிய பிரச்னைகள் குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் விவாதிக்க நீங்கள் தயாராக இருக்கிறீர்களா? ரஃபேல் போர் விமான ஒப்பந்தம், வியாபம் முறைகேடு என பாஜக ஆட்சி மீது அடுக்கடுக்கான புகார்கள் உள்ளன. அவை குறித்து சுதந்திர தின உரையில் ஒரு வார்த்தைகூட மோடி பேசவில்லை.
பாஜக தலைவர்களின் பாதுகாப்பிலும், கண்காணிப்பிலும் பசுவதை என்ற பெயரில் சிறுபான்மையினத்தைச் சேர்ந்த அப்பாவிகள் அடித்துக் கொல்லப்படுகின்றனர். நாட்டில் பெண்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை. பாஜக ஆளும் மாநிலங்களில்தான் பல கொடுமைகள் நடக்கின்றன. இவை குறித்தாவது பிரதமர் பேச தயாராக இருக்கிறாரா?
ரூபாயின் மதிப்பு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு சரிந்துள்ள நிலையில், பொருளாதாரத்தை வெற்றி நடைபோட வைத்துவிட்டதாக மோடி கூறுகிறார். அவர் தனது கடைசி சுதந்திர தின உரையிலாவது உண்மையைப் பேசி இருக்கலாம். 
ஒரு பக்கம் டோக்கா லாமில் சீன ராணுவம் உள்கட்டமைப்பை மேம்படுத்துகிறது. மறுபக்கம் உள்நாட்டில் இளைஞர்கள் வேலையில்லாமல் தவித்து வருகின்றனர். 
இவற்றுக்கு நடுவே பிரதமர் மோடி தனது அரசு பல சாதனைகளைப் படைத்துவிட்டதாகக் கூறுவது ஒன்றுமில்லா வெற்றுப் பேச்சுதானே தவிர வேறு எதுவும் இல்லை என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com