புது தில்லி: தென்னிந்திய மாநிலங்களான கேரளா மற்றும் கர்நாடகாவில் கன மழை பெய்து, கேரள மாநிலம் முழுவதும் வெள்ளக்காடாக மாறியுள்ளது.
கேரளாவில் மழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவு போன்ற சம்பவங்களில் சிக்கி இதுவரை 167 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. லட்சக்கணக்கானோர் வீடுகளை இழந்து நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்னர்.
கடந்த வாரம் முதல் கன மழை பெய்து வரும் நிலையில், மீட்புப் பணிகளுக்குக் கடும் சவாலாக தொடர்ந்து கன மழை நீடிக்கிறது.
நேற்றும் கேரளா உள்ளிட்ட பகுதிகளில் கன மழை பெய்த நிலையில், ஆகஸ்ட் 17ம் தேதியான இன்றும் கேரளா, கர்நாடகாவின் கடலோர மற்றும் உள் மாவட்டங்களிலும், தமிழகத்தின் ஒரு சில பகுதிகளிலும் கன மழை முதல் மிகக் கன மழைக்கு வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும், இந்தியாவில் குஜராத், மகாராஷ்டிரம், உத்தராகண்ட், இமாச்சல், ராஜஸ்தான் உள்ளிட்ட பகுதிகளிலும் கன மழை முதல் மிகக் கன மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.