புது தில்லி: பிகார் காப்பகத்தில் சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவத்தில் முன்னாள் அமைச்சர் மஞ்சு வெர்மாவின் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
மேலும், பிரஜேஷ் தாகூருக்கு சொந்தமான 7 இடங்கள், மற்றும் மஞ்சு வெர்மாவுக்கு தொடர்புடைய 5 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
பிகார் மாநிலம், முசாஃபர்பூர் மாவட்டத்தில் அரசு சாரா அமைப்பு (என்ஜிஓ) ஒன்று காப்பகத்தை நடத்தி வந்தது. அங்கிருந்த சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட அதிர்ச்சி தகவல் அண்மையில் வெளியானது. இதையடுத்து, இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான பிரஜேஷ் தாகூர் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர். அதில், முசாஃபர்பர் மாவட்ட குழந்தைகள் பாதுக்காப்பு அதிகாரி ரவிகுமார் ரௌஷனும் ஒருவர்.
இந்த கைது நடவடிக்கையை அடுத்து ரவிகுமாரின் மனைவி ஷிவ்குமாரி, 'அமைச்சர் மஞ்சுவின் கணவர் சந்தேஷ்வர் காப்பகத்தில் உள்ள சிறுமிகளின் அறைகளுக்கு அடிக்கடி சென்றுள்ளார்' என்று குற்றம்சாட்டினார்.
இதையடுத்து மஞ்சு வெர்மாவை பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்த நிலையில், அவர் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.
இந்த வழக்கை விசாரிக்க சிறப்பு விசாரணைக் குழுவை மாநில அரசு அமைத்தது. ஆனால், எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்த காரணத்தால் இந்த வழக்கை சிபிஐ-க்கு மாற்றிய மாநில அரசு, வழக்கு ஆவணங்களை சிபிஐ வசம் ஒப்படைத்தது.