வெள்ள பாதிப்பு: கேரளாவுக்கு ஹரியானாவும், பிகாரும் தலா ரூ.10 கோடி நிதியதவி
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு ஹரியானாவும், பிகாரும் தலா ரூ.10 கோடி நிதியதவி அறிவித்துள்ளன.
கேரளாவில் வரலாறு காணாத அளவுக்கு கனமழை பெய்து வருகிறது. இதனால் 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மோசமான வெள்ள பாதிப்பை கேரளா சந்தித்துள்ளது. வெள்ளம் மற்றும் கனமழையால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் 320க்கும் மேற்பட்டோர் இதுவரை பலியாகியுள்ளனர்.
எனவே கேரளா மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப மற்ற மாநிலங்கள் நிதியுதவி வழங்க வேண்டும் என்று கேரள அரசு கேட்டுக் கொண்டது. அதனால் அந்த மாநிலத்துக்கு உதவும் வகையில் பல்வேறு தரப்பில் இருந்து நிதியுதவிகள் வந்து கொண்டிருக்கின்றன.
இந்நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு ஹரியானா சார்பில் அம்மாநில முதல்வர் மனோகர் லால் கட்டார் ரூ.10 கோடியும், பிகார் சார்பில் அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார் ரூ.10 கோடியும் நிதியுதவி அளிப்பதாக அறிவித்துள்ளனர்.