புது தில்லி: கேரள மழை வெள்ள பாதிப்புகளை அதிதீவிர பேரிடர் என்று மத்திய உள்துறை அறிவித்துள்ளது.
"கடவுளின் தேசம்" என்று அழைக்கப்பட்ட கேரள மாநிலம், தற்போது வரலாறு காணாத மழை வெள்ளத்தால் அவதிப்பட்டு வருகிறது. கடந்த 100 ஆண்டுகளில் பெய்யாத மழை பெய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக ஏறக்குறைய ரூ. 20 ஆயிரம் கோடியளவுக்கு இழப்பீடுகள் ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுமார் 10 லட்சம் பேர் அரசு சார்பிலான நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் படி இறந்தவர்களின் எண்ணிக்கை 247 ஆகும். அதே போல சுமார் 17, 343 பேர் தங்களது வீடுகளை இழந்துள்ளனர். தற்பொழுது மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் கேரள மழை வெள்ள பாதிப்புகளை அதிதீவிர பேரிடர் என்று மத்திய உள்துறை அறிவித்துள்ளது.
இது தொடர்பாக மத்திய உள்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கேரள மழை வெள்ள பாதிப்புகள் 'அதிதீவிர பேரிடர்' என்று அறிவிக்கப்படுகிறது. கடுமையான பாதிப்புகளை உண்டாக்கிய பேரிடர் என்று இது தீர்மானிக்கப்படுகிறது. வெள்ளம் மற்றும் பாதிப்புகளின் காரணமாக உண்டான சேதங்களை உள்ளடக்கிய, கேரள அரசின் அறிக்கையில் விடுக்கப்பட்ட வேண்டுகோளின் படி இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.