சைக்கிள் வாங்க சேர்த்து வைத்த உண்டியல் பணத்தை கேரள வெள்ள நிதிக்கு அளித்த சிறுமி அனுப்ரியாவுக்கு ஹீரோ சைக்கிள்ஸ் நிறுவனம் திங்கள்கிழமை சைக்கிளை பரிசளித்தது.
உண்டியலில் பணம் சேர்த்து வைத்து சைக்கிள் வாங்க வேண்டும் என்ற தனது கனவை கைவிட்டுவிட்டு, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு தனது உண்டியல் பணத்தைக் கொடுத்து உதவ முன் வந்துள்ளார் 8 வயது சிறுமி.
வரலாறு காணாத மழையால் கடந்த இரண்டு வாரங்களாக கேரள மாநிலத்தின் பெரும்பகுதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.
இதுவரை மழை மற்றும் வெள்ளம், நிலச்சரிவு தொடர்பான சம்பவங்களால் 370 பேர் உயிரிழந்தனர். ஏராளமானோர் காயமடைந்தனர். லட்சக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
பல்வேறு மாநில அரசுகள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள், பொதுமக்கள் என கேரள அரசுக்கு பல தரப்பில் இருந்து உதவிக் கரங்கள் நீண்டுள்ளன.
இந்த நிலையில் விழுப்புரத்தைச் சேர்ந்த 8 வயது சிறுமி அனுப்ரியா, தொலைக்காட்சிகளில் வெள்ளம் தொடர்பான செய்திகளைப் பார்த்து கவலை அடைந்தார். மற்ற பிள்ளைகளைப் போல சைக்கிள் வாங்க வேண்டும் என்ற கனவோடு தனது உண்டியலில் சிறுக சிறுக சேர்த்து வைத்தப் பணத்தை கேரள மக்களுக்கு உதவ தாமாக முன்வந்து தனது தந்தையிடம் கூறியுள்ளார்.
வெறும் சில்லறைக் காசுகளாக அவர் சேர்த்து வைத்திருக்கும் தொகை எவ்வளவு தெரியுமா? ரூ.8,846. அதனோடு மிச்சத் தொகையை போட்டு ரூ.9 ஆயிரமாக டிமாண்ட் டிராஃப்ட் எடுத்து கேரள முதல்வருக்கு அனுப்பி வைத்தார் சிறுமி அனுப்ரியாவின் தந்தை சண்முகநாதன்.
இது பற்றிய செய்தி அறிந்த ஹீரோ சைக்கிள் நிறுவனம், உடனடியாக சண்முகநாதன் வீட்டுக்கு ஒரு தகவலை அனுப்பியது. அதில் அன்புள்ள அனுப்ரியாவுக்கு, உன்னுடைய மனித நேயத்தையும், உதவும் குணத்துக்கும் நாங்கள் தலைவணங்குகிறோம். உனக்காக எங்களது புதிய ரக சைக்கிள் காத்திருக்கிறது. உங்கள் வீட்டு முகவரியையும், செல்போன் எண்ணையும் எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும் என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி அந்த சிறுமிக்கு ஹீரோ சைக்கிள்ஸ் நிறுவனம் சைக்கிளை பரிசளித்துள்ளது.