கேரளாவில் ஏற்பட்ட பெரும் மழையால் உண்டான வெள்ளத்தில் சிக்கி ஏராளமானோர் உயிரிழந்தனர். லட்சக்கணக்கானோர் வீடுகளையும், வாழ்வாதாரங்களையும் இழந்தனர்.
வெள்ளம் சூழ்ந்த கேரளாவில் தேசிய பேரிடர் மீட்புப் படை, முப்படை வீரர்கள் என மீட்புப் பணிகள் துரித வேகத்தில் நடந்தது.
ஹெலிகாப்டர்கள் மூலமாகவும், படகுகள் மூலமாகவும் வெள்ளத்தில் சிக்கியவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.
மீட்புக் காட்சிகளும், வெள்ளம் கரைபுரண்டு ஓடும் புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவியதால் நிவாரண உதவிகளும் கேரளாவுக்கு அதிக அளவில் சென்றடைந்து வருகின்றன.
இந்த நிலையில், மீட்புப் படையினரால் ஒரு வீட்டுக்குள் சிக்கியிருந்த 2 பெண்கள் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில், மீட்புக் குழுவுக்கு நன்றி செலுத்தும் விதமாக வீட்டின் மொட்டை மாடியில் வெள்ளை நிற பெயிண்டால் தேங்க்ஸ் என்று எழுதி தங்களது நன்றியை பறைசாற்றினர் குடும்பத்தினர்.
இந்த புகைப்படம் ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் வேகமாகப் பகிரப்பட்டு வருகிறது.