65 ஆண்டுகாலம் எங்களின் நட்பு நிலைத்தது என்று மறைந்த முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் இரங்கல் கூட்டத்தில் அத்வானி உருக்கமாக பேசினார்.
மறைந்த முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய்-க்கு, தில்லியில் அனைத்து கட்சிகள் சார்பில் இரங்கல் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் பாஜக மூத்த தலைவர் அத்வானி பேசியதாவது:
வாஜ்பாய் உடனான எனது நட்பு 65 ஆண்டுகாலம் நீடித்தது மகிழ்ச்சியளிக்கிறது. அவரது நடவடிக்கைகளை நான் மிக அருகில் இருந்து பார்த்துள்ளேன். இருவரும் ஒன்றாக இணைந்து பணியாற்றியதில் பரஸ்பரம் அனுபவங்களை பகிர்ந்துகொண்டுள்ளோம். இருவரும் இணைந்து நிறைய புத்தகங்கள் படித்துள்ளோம், திரைப்படங்கள் கண்டு ரசித்துள்ளோம். அவர் நன்கு சமைப்பார். எனக்காக பலமுறை சமைத்துள்ளார்.
நான் இதுவரை பல கூட்டங்களில் பேசியுள்ளேன். ஆனால் எனது நண்பர் அடல் பிஹாரி வாஜ்பாய் இல்லாத ஒரு கூட்டத்தில் பேசுவேன் என்று ஒருபோதும் நினைத்ததில்லை. வாஜ்பாய் உடன் பணியாற்றியவர்கள், அவரது தலைமையின் கீழ் செயல்பட்டவர்கள் என்றில்லாமல் இந்த இரங்கல் கூட்டத்தில் அனைத்து கட்சித் தலைவர்களும் கலந்துகொண்டுள்ளது எனக்கு பெருமையாக உள்ளது என்றார்.