ராஜீவ் கொலையாளிகளை விடுவிக்க கோரிய வழக்கு: செப்.6-க்கு விசாரணை ஒத்திவைப்பு

ராஜீவ் காந்தி கொலையாளிகளை விடுவிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணையை உச்ச நீதிமன்றம் செப்டம்பர் 6-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு
ராஜீவ் கொலையாளிகளை விடுவிக்க கோரிய வழக்கு: செப்.6-க்கு விசாரணை ஒத்திவைப்பு


ராஜீவ் காந்தி கொலையாளிகளை விடுவிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணையை உச்ச நீதிமன்றம் செப்டம்பர் 6-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் கருணை மனுக்கள் மீது குடியரசுத் தலைவர் மிகவும் தாமதமாக முடிவெடுத்ததாகக் கூறி, அவர்களின் தண்டனையை ஆயுள் தண்டனையாக உச்ச நீதிமன்றம் குறைத்து கடந்த 2014-ஆம் ஆண்டு பிப்ரவரி 18-ஆம் தேதி தீர்ப்பு அளித்தது.
மேலும், இந்த வழக்கில் இந்த மூவருடன் சேர்த்து ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த நளினி (முருகனின் மனைவி), ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோர் ஏற்கெனவே 20 ஆண்டுகள் சிறையில் தண்டனையைக் கழித்துள்ளதால் அவர்களை விடுதலை செய்வது குறித்து தமிழக அரசு முடிவு எடுக்கலாம் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. 
இதைத் தொடர்ந்து, ஏழு பேரையும் விடுதலை செய்ய தமிழக சட்டப்பேரவையில் 2014-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 
அதே ஆண்டு பிப்ரவரி 19-ஆம் தேதி தமிழக அரசு, மத்திய அரசுக்கு கடிதம் எழுதியது. இந்த நடவடிக்கையை எதிர்த்து மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. 
இது தொடர்பான மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றத்தின் அப்போதைய தலைமை நீதிபதி எச்.எல். தத்து தலைமையிலான அரசியல் சாசன அமர்வு 2014-ஆம் ஆண்டு ஜூலை 15-ஆம் தேதி தொடங்கி 11 நாள் விசாரணை நடத்தியது.
இதைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்றம் 2015-ஆம் ஆண்டு டிசம்பர் 2-ஆம் தேதி அளித்தத் தீர்ப்பில், மத்திய அரசின் புலனாய்வு அமைப்புகளால் தொடுக்கப்பட்ட வழக்குகளில் தண்டனைக் கைதிகளை விடுதலை செய்யும் அதிகாரம் மத்திய அரசுக்குத்தான் உண்டு. 
அதன்படி, தொடர்புடைய அரசுகள்' என்பதை வழக்கின் தன்மைக்கு ஏற்ப மத்திய, மாநில அரசுகள் எனவும், ஆலோசனை' என்ற வார்த்தையை ஒப்புதல் எனவும் கருத வேண்டும். 
குற்றவாளிக்கு தன்னிச்சையாக தண்டனையை குறைக்க குற்றவியல் தண்டனைச் சட்டம் 432 (1) பிரிவு வழிவகுக்கவில்லை. 
சம்பந்தப்பட்ட குற்றவாளி அளிக்கும் மனுவைப் பரிசீலித்து, அதன் மீது நீதிபதி விசாரித்து திருப்தி அடைந்த பிறகே அவரது தண்டனையை குறைக்க முடியும் என குறிப்பிட்டது. 
இதனிடையே, ராஜீவ் கொலைக் கைதிகளை விடுவிப்பது தொடர்பாக தமிழக அரசு மத்திய அரசுக்கு கடந்த ஆண்டு மார்ச் மாதம் 2-ஆம் தேதி மீண்டும் கடிதம் எழுதியது. கைதிகள் சார்பிலும் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. 
இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்ற கடந்த ஆகஸ்ட் 10-ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசின் சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் பிங்கி ஆனந்த் ஆஜராகி, மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிக்கையை தாக்கல் செய்தார். 
அதில் ராஜீவ் காந்தி கொலையாளிகளை விடுவித்தால் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தி, சர்வதேச சிக்கலை உருவாக்கும் எனத் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த வழக்கு விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ரஞ்சன் கோகோய், நவீன் சின்ஹா, கே.எம். ஜோசப் ஆகியோர் அடங்கி அமர்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. 
அப்போது முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்டோர் சார்பில் வழக்குரைஞர்கள் கோபால் சங்கரநாராயணன், எஸ். பிரபு ராமசுப்ரமணியன் ஆகியோர் ஆஜராகி, பொது மன்னிப்பு வழங்கக் கோரி தமிழக ஆளுநரிடம் அரசியலமைப்புச் சட்டம் 161-ஆவது பிரிவின் கீழ் மனு அளிக்கப்பட்டது. 
இந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் தமிழக ஆளுநர் முடிவு எடுக்காமல் இருப்பதாக அறிகிறோம். 
எனவே, இந்த வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும்' என்றனர். இதைத் தொடர்ந்து நீதிபதிகள், அப்படியென்றால், பொது மன்னிப்பு வழங்கக் கோரி தமிழக ஆளுநருக்கு எழுதிய கடிதத்தை தாக்கல் செய்யுங்கள் எனத் தெரிவித்து, வழக்கு விசாரணையை செப்டம்பர் 6-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com