2019-ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் மக்களவை தேர்தலில், மகாராஷ்டிர மாநிலம், புணே மக்களவைத் தொகுதியில் ஹிந்தி நடிகை மாதுரி தீட்சித்தை களமிறக்க பாஜக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக, கடந்த ஜூன் மாதத்தில் மாதுரி தீட்சித்தை, பாஜக தலைவர் அமித் ஷா சந்தித்து மோடி ஆட்சியின் சாதனைகள் குறித்து விளக்கினார். இந்நிலையில், மக்களவைத் தேர்தலுக்கான வேட்பாளர்கள் பட்டியலில் அவர் பெயரும் இடம் பெற்றுள்ளது.
இதுதொடர்பாக பாஜக மூத்த தலைவர் ஒருவர் கூறியதாவது:
2019-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை கட்சியினர் தயாரித்து வருகின்றனர். அதில் மாதுரி தீட்சித்தின் பெயரும் இடம் பெற்றுள்ளது. அவருக்கு வாய்ப்பளிக்க கட்சி தீவிர ஆர்வம் காட்டி வருகிறது. புணே தொகுதியில் மாதுரிக்கு செல்வாக்கு அதிகம் உள்ளதால், அவரை அங்கு களமிறக்குவது குறித்து பரிசீலித்து வருகின்றனர் என அவர் தெரிவித்தார்.
குஜராத் முதல்வராக நரேந்திர மோடி பதவியேற்ற பின்பு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் புதுமுகங்களை களமிறக்கினார். அந்த தேர்தலில் பாஜக அதிக இடங்களில் வெற்றி பெற்றது. அதைப்போல, தில்லியில் 2017-ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலிலும் புதுமுகங்களை களமிறக்கி பாஜக வெற்றி கண்டது. அந்த உத்தியை இந்த முறை மக்களவைத் தேர்தலிலும் மோடி பயன்படுத்துகிறார் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.