சிபிஐ சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா மீது ஊழல் வழக்குப் பதிவு செய்வதற்கு முன், கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலிடம் சட்ட ஆலோசனை பெறப்பட்டதாக சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா தில்லி உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இறைச்சி ஏற்றுமதியாளர் மொயின் குரேஷி தொடர்புடைய வழக்கில், தொழிலதிபர் சதீஷ் பாபு சனாவை விடுவிக்க லஞ்சம் பெற்றதாக சிபிஐ சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா, சிபிஐ துணை கண்காணிப்பாளர் தேவேந்திர குமார் ஆகியோர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்தது.
இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி ராகேஷ் அஸ்தானா தில்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு மீதான விசாரணை உயர்நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை மீண்டும் நடைபெற்றது. அப்போது, இந்த விவகாரம் குறித்து, அலோக் வர்மா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டிருந்ததாவது:
அஸ்தானா மீது வழக்குப் பதிவு செய்வது குறித்து, கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் பி.எஸ்.நரசிம்மாவிடம் சட்ட ஆலோசனை கேட்கப்பட்டது. குற்றம்சாட்டப்பட்டவர் மீது ஏற்கெனவே விசாரணை தொடங்கப்பட்டிருந்தால், அவர் மீது வழக்குப் பதிவு செய்ய அரசிடம் அனுமதி பெறத் தேவையில்லை என்று அவர் தெரிவித்தார்.
மேலும், பிடி ஆணை தேவைப்படாத புகார்கள் குறித்து வழக்குப் பதிவு செய்யவோ, முதல்கட்ட விசாரணை மேற்கொள்ளவோ அரசின் அனுமதி தேவையில்லை என்று ஊழல் தடுப்புச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக அவர் ஆலோசனை அளித்தார் என்று அந்தப் பிரமாணப் பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மத்திய அரசின் அனுமதி இல்லாமல் தன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும், அதனை ரத்து செய்ய வேண்டும் என்றும் அஸ்தானாவின் மனுவில் கோரப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.