புதுதில்லி: இந்திய பொதுத் துறை வங்கிகளில் ரூ.9,000 கோடி அளவுக்கு கடன் மோசடி செய்து விட்டு இங்கிலாந்திற்கு தப்பிச்சென்ற தொழிலதிபர் விஜய் மல்லையாவை நாடு கடத்தக்கோரும் வழக்கில் நாளை தீர்ப்பு வழங்கப்பட உள்ள நிலையில் இந்திய விசாரணை முகமைகள் லண்டன் புறப்பட்டு சென்றுள்ளது.
இந்திய பொதுத் துறை வங்கிகளில் ரூ.9,000 கோடி அளவுக்கு கடன் பெற்று, அதனை திருப்பி செலுத்தாத விஜய் மல்லையா (62), பிரிட்டனுக்கு தப்பிவிட்டார். கடந்த 2016, மார்ச்சில் இந்தியாவைவிட்டு வெளியேறிய அவரை, நாடு கடத்தி கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளை லண்டன் நீதிமன்றம் மூலம் மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.
நாடு கடத்தக் கோரும் வாரண்ட் அடிப்படையில் கைது செய்யப்பட்ட அவர், தனக்கு எதிரான வழக்கு அரசியல் ரீதியாக தூண்டப்பட்டது என்ற குற்றச்சாட்டை முன்வைத்து நாடு கடத்தப்படுவதற்கு எதிராக வெஸ்ட்மின்ஸ்டா் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் விஜய் மல்லையா வழக்கு தொடுத்தார்.
அந்த வழக்கை நீதிபதி எம்மா ஆா்புத்நாட் விசாரித்து வந்த நிலையில் நாளை திங்கள்கிழமை இறுதி தீர்ப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாளை தீர்ப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்திய விசாரணை முகமைகள் லண்டன் புறப்பட்டுச் சென்றுள்ளது. சிபிஐ இணை இயக்குநர் சாய் மனோகர் தலைமையில் சிபிஐ மற்றும் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் அடங்கிய குழு லண்டனுக்கு புறப்பட்டு சென்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
என்னை நாடு கடத்தக் கோரும் வழக்கில் நீதிமன்றத்தின் மீது மிகுந்த நம்பிக்கை உள்ளது. எனக்கு சாதகமான உத்தரவு வரும் என நம்புகிறேன் என்று தெரிவித்திருந்த மல்லையா, கிங்பிஷர் விமான சேவை நிறுவனத்துக்காக வாங்கப்பட்ட கடன், தொழில் ரீதியாக நஷ்டமடைந்த நிலையில் தன்னை மோசடியாளராக சித்தரிப்பது முறையல்ல. தனது கடனுக்கான அசல் தொகை முழுவதையும் திருப்பிச் செலுத்த தாம் தயாராக உள்ளதாகவும், தயவு செய்து வங்கிகள் பெற்றுக்கொள்ள வேண்டும் என மல்லையா தெரிவித்துள்ளார்.
இந்த தீா்ப்பு இந்திய அரசுக்கு சாதகமாக அமைந்தாலும், பிரிட்டன் சட்ட விதிகளின்படி மல்லையாவை உடனடியாக இந்தியாவுக்கு நாடு கடத்திக் கொண்டு வர முடியாது என தெரியவந்துள்ளது.