மல்லையாவை நாடு கடத்துவதற்கான நீதிமன்ற அறிக்கை: பிரிட்டன் உள்துறை அமைச்சகத்திடம் ஒப்படைப்பு

வங்கிக் கடன் மோசடியாளராகக் குற்றம்சாட்டப்பட்டுள்ள தொழிலதிபர் விஜய் மல்லையாவை நாடு கடத்துவதற்கு அனுமதியளித்து லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர்
மல்லையாவை நாடு கடத்துவதற்கான நீதிமன்ற அறிக்கை: பிரிட்டன் உள்துறை அமைச்சகத்திடம் ஒப்படைப்பு


வங்கிக் கடன் மோசடியாளராகக் குற்றம்சாட்டப்பட்டுள்ள தொழிலதிபர் விஜய் மல்லையாவை நாடு கடத்துவதற்கு அனுமதியளித்து லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அறிக்கை, பிரிட்டன் உள்துறை அமைச்சகத்திடம் அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, மல்லையாவை நாடு கடத்துவதற்கான அதிகாரப்பூர்வ பணிகளை பிரிட்டன் உள்துறை செயலாளர் சஜித் ஜாவித் தொடங்க உள்ளார்.
இது குறித்து, இந்த வழக்கு விசாரணையின் போது இந்திய அரசு தரப்பில் ஆஜரான நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், மல்லையா நாடு கடத்தப்படுவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து, நீதிமன்ற அறிக்கை மீதான முடிவை 2 மாதங்களுக்குள் உள்துறை அமைச்சகம் எடுக்க வேண்டும். எனினும், மாஜிஸ்திரேட் நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்புக்கு எதிராக பிரிட்டன் உயர்நீதிமன்றத்தில் 14 நாள்களுக்குள் மேல்முறையீடு செய்வதற்கான வாய்ப்பு மல்லையா தரப்புக்கு உள்ளது என்றார்.
இந்திய வங்கிகளில் சுமார் ரூ.9,000 கோடி கடன் மோசடி செய்ததாக மல்லையா மீது குற்றம்சாட்டப்பட்டுள்ள நிலையில், அவரை நாடு கடத்திக் கொண்டு வருவதற்கு மத்திய அரசு பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டது. இந்நிலையில், அவரை நாடு கடத்துவதற்கு அனுமதியளித்து லண்டன் நீதிமன்றம் கடந்த திங்கள்கிழமை தீர்ப்பளித்தது. 
முன்னதாக, இந்த வழக்கு விசாரணை நிலையில் இருந்தபோது, இந்தியாவில் அரசியல் காரணங்களுக்காகத் தன் மீது பொய்யான வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக மல்லையா கூறியிருந்தார். மல்லையாவுக்காக மும்பையில் தயார் செய்யப்பட்டுள்ள சிறையில் அடிப்படை வசதிகள் இல்லை என்பதால், அவரை நாடு கடத்தக் கூடாது என்றும் நீதிமன்றத்தில் மல்லையா தரப்பினர் வாதிட்டனர்.
இந்நிலையில், வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்ற தலைமை நீதிபதி எம்மா ஆர்புத்நாத், மல்லையாவுக்கு எதிராகப் பொய் வழக்கு பதியப்பட்டுள்ளதாகக் கூறுவதற்கு எந்தவித அறிகுறியும் இல்லை. அவருக்கு எதிரான ஆதாரங்கள் வலுவாக உள்ளன.
மல்லையா அடைக்கப்படவுள்ள சிறை அறையின் காணொலியைப் பார்த்ததில், அது சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது என்பதையும், சமீபத்தில் புதுப்பிக்கப்பட்டுள்ளது என்பதையும் அறிய முடிகிறது. சிறையில் அவருக்கு ஏதேனும் ஒரு விதத்தில் ஆபத்து நேரிடும் எனக் கூறப்படுவதை நம்புவதற்கு எந்தவிதக் காரணமும் இல்லை என்று நீதிபதி தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com