"ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக் குழு (ஜேபிசி) விசாரணை நடத்தினால், உண்மைகள் அம்பலமாகும்' என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, அவர் தில்லியில் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பான தலைமை கணக்கு தணிக்கையாளரின் (சிஏஜி) அறிக்கை, பொது கணக்குக் குழுவிடம் (பிஏசி) சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. மக்களவை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையிலான அந்த குழுவில், அதுபோன்ற எந்த அறிக்கையும் தாக்கல் செய்யப்படவில்லை. ரஃபேல் விவகாரத்தில் பெரும் ஊழல் நடைபெற்றுள்ளது. இதுகுறித்து நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை நடத்தினால், மோடியும் அனில் அம்பானியும் சிக்குவர் என்றார் அவர்.
இப்பேட்டியின்போது உடனிருந்த மல்லிகார்ஜுன கார்கே, "பொதுக் கணக்கு குழுவுக்கு இதுவரை எந்த அறிக்கையும் கிடைக்கப் பெறவில்லை. அப்படியென்றால், அந்த அறிக்கை எங்கு சென்றது? பிரதமர் மோடி அமைத்த வேறு குழுவுக்கு சென்றதா? ரஃபேல் விவகாரத்தில், மத்திய அரசின் பார்வையிலேயே ரூ.30,000 கோடி அளவுக்கு ஊழல் நடைபெற்றுள்ளது' என்றார்.