தெலங்கானா மாநில முதல்வராக கே.சந்திரசேகர் ராவ் பொறுப்பேற்ற அடுத்த தினத்திலேயே கட்சியின் செயல் தலைவராக அவரது மகன் கே.டி.ராமாராவ் நியமிக்கப்பட்டார்.
இதுதொடர்பாக டிஆர்எஸ் கட்சி சார்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தற்போது தேசிய அரசியல் விவகாரங்களிலும், மாநில அரசின் வளர்ச்சிப் பணிகளிலும் தீவிர கவனம் செலுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இதை கருத்தில் கொண்டு கட்சித் தலைவரும், முதல்வருமான கே.சந்திரசேகர் ராவ், சிர்சில்லா தொகுதியின் எம்எல்ஏ கே.டி.ராமாராவை கட்சியின் செயல் தலைவராக நியமித்துள்ளார்.
கே.டி.ராமாராவ் தலைமையில் கட்சி சிறந்த முன்னேற்றத்தைக் காணும் என்று முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் நம்புவதாக அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் நடைபெற்ற 119 தொகுதிகளுக்கான சட்டப்பேரவைத் தேர்தலில் 88 தொகுதிகளில் வெற்றி பெற்று தெலங்கானாவின் முதல்வராக தொடர்ந்து இரண்டாம் முறையாக சந்திரசேகர் ராவ் வியாழக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார்.
பேரவை தேர்தல் வெற்றிக்குப் பிறகு, அடுத்த ஆண்டு நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலிலும், தேசிய அரசியலிலும் டிஆர்எஸ் கட்சி முக்கிய பங்கு வகிக்கும். தேசிய கட்சிகளான காங்கிரஸ் மற்றும் பாஜக அல்லாத பிராந்திய கட்சிகளின் ஆதரவுடன் மத்தியில் ஆட்சி அமைக்கப் பாடுபடப் போவதாகவும் சந்திரசேகர் ராவ் தெரிவித்திருந்தார்.