குஜராத்தில் அமைக்கப்பட்டுள்ள நாட்டின் முதல் உள்துறை அமைச்சரான சர்தார் வல்லபபாய் படேலின் சிலையை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் சனிக்கிழமை பார்வையிட்டார். படேலின் நினைவு தினத்தையொட்டி (டிச.15) ராம்நாத் கோவிந்த் அங்கு சென்றார்.
கேவடியாவில் உள்ள இந்த சிலை உலகிலேயே மிகப் பெரிய சிலையாகும். படேலின் சிலை ஒற்றுமைக்கான சிலை என அழைக்கப்படுகிறது. கேவடியாவில் ரயில் நிலையம் அமைக்கவும் ராம்நாத் கோவிந்த் அடிக்கல் நாட்டினார்.
அந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
182 மீட்டர் உயர படேல் சிலை கெவாடியாவில் அமைக்கப்பட்டுள்ளதன் மூலம், இதைக் காண சுற்றுலாப் பயணிகள் வருகை தருவதால் இங்குள்ள பழங்குடியின இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்து வருகிறது. கெவாடியா வருவதற்கு வசதியாக ரயில்வே போக்குவரத்து வசதி ஏற்படுத்தப்படவுள்ளது.
ரயில் மூலம் அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் வருகை புரிவார்கள். போக்குவரத்துக்கு மட்டுமல்லாமல் பொருளாதார வளர்ச்சிக்கும் ரயில்வே பெரும்பங்கு வகிக்கிறது.
அனைத்து வசதிகளுடன் கூடிய சுற்றுச்சூழலுக்கு தீங்கு ஏற்படுத்தாத வகையில் இந்த ரயில் நிலையம் அமைக்கப்படுகிறது. ரூ.20 கோடி செலவில் அமைக்கப்படவுள்ள இந்த ரயில் நிலையம், சுற்றுலாப் பயணிகளை நேரடியாக படேல் சிலையுடன் இணைக்க உதவும் என்றார் ராம்நாத் கோவிந்த்.
முன்னதாக, ராம்நாத் கோவிந்துடன் குஜராத் முதல்வர் விஜய் ரூபானி, மாநில தலைமைச் செயலர் ஜே.என்.சிங், ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் உள்ளிட்டோர் இருந்தனர்.