மத்திய பட்ஜெட்டில், முனைவர் ஆய்வுப் படிப்பை மேற்கொள்ளும் 1000 பி.டெக் மாணவர்களுக்கு ஆய்வு உதவித்தொகை (ஃபெலோஸஷிப்), 24 புதிய மருத்துவக் கல்லூரிகள் உள்ளிட்ட அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன.
இது தொடர்பாக, மக்களவையில் பட்ஜெட்டை சமர்ப்பித்து நிதியமைச்சர் அருண் ஜேட்லி கூறியதாவது:
இந்த நிதியாண்டில் கல்வித்துறைக்கு ரூ.85,010 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் 35,010 கோடி உயர் கல்விக்கும், ரூ.50,000 கோடி பள்ளிக் கல்விக்கும் ஒதுக்கப்படுகிறது. குழந்தைகளை பள்ளிக்கு வரவழைக்க நம்மால் முடிகிறது. ஆனால் தரமான கல்வி என்பது இன்னமும் கவலை தரும் அம்சமாகவே உள்ளது. எனவே, 2022ஆம் ஆண்டுக்குள் கல்விக்கான கட்டமைப்புகள் மேம்படுத்தப்படும்.
திட்டமிடல் மற்றும் கட்டடக் கலை தொடர்பாக இரண்டு புதிய முழு அளவிலான பள்ளிகள் அமைக்கப்படும். தவிர, இந்தத் துறையில், ஐஐடி மற்றும் தேசிய தொழில்நுட்பக் கல்வி நிலையங்கள் (என்ஐடி) ஆகியவற்றின்கீழ் 18 துணைப் பள்ளிகளும் அமைக்கப்படும்.
ஐஐடி மற்றும் இந்திய அறிவியல் கல்வி நிலையங்களில் (ஐஐஎஸ்சி) பிஹெச்டி ஆய்வுப் படிப்பை மேற்கொள்ளும் 1000 பி.டெக் மாணவர்களுக்கு பிரதமர் கல்வி உதவித்தொகை திட்டத்தின்கீழ் உதவித்தொகை அளிக்கப்படும். நாட்டில் மருத்துவர்-நோயாளி விகிதத்தில் உள்ள இடைவெளியைக் குறைக்க தற்போதுள்ள மாவட்ட மருத்துவமனைகளை மேம்படுத்துவதன் மூலம் 24 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்படும் என்று ஜேட்லி அறிவித்தார்.