அரசு நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள தனியார் நிறுவனங்களைப் பயன்படுத்தக் கூடாது என்று அனைத்துத் துறைகளுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
நாடாளுமன்றக் குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில் இந்த உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளது. அரசு அதிகாரிகளின் நடத்தை மற்றும் நெறிமுறை மீறல்களுக்கான நாடாளுமன்றக் குழு கடந்த ஜனவரி 4-ஆம் தேதி நாடாளுமன்றத்தின் மக்களவையில் அறிக்கை சமர்ப்பித்தது.
அந்த அறிக்கையில், "மாநில அரசுகளும், மத்திய அரசின் பல்வேறு துறைகளும் அரசு நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள தனியார் நிறுவனங்களைப் பயன்படுத்தாமல் தடுக்கப்பட வேண்டும்' என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதனடிப்படையில், அனைத்து மாநில தலைமைச் செயலர்களுக்கும், மத்திய அரசின் அனைத்து துறைகளுக்கும் மத்திய அரசின் பணியாளர் துறை வியாழக்கிழமை சுற்றறிக்கை அனுப்பியது. அதில், "அரசு நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு தனியார் நிறுவனங்களை பயன்படுத்திக் கொள்ளக் கூடாது. உத்தரவை மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இந்த உத்தரவை அனைத்து மாவட்ட நிர்வாகத்திலும் விரைவில் அமல்படுத்த வேண்டும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.