மதசார்பற்ற ஜனதா தளத்துடன் பேச இடதுசாரிகள் முடிவு

கர்நாடக சட்டப் பேரவைத் தேர்தல் கூட்டணி தொடர்பாக மதசார்பற்ற ஜனதா தளம் (ஜேடி(எஸ்)) கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய இடதுசாரி கட்சிகள் முடிவு

கர்நாடக சட்டப் பேரவைத் தேர்தல் கூட்டணி தொடர்பாக மதசார்பற்ற ஜனதா தளம் (ஜேடி(எஸ்)) கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய இடதுசாரி கட்சிகள் முடிவு செய்துள்ளன.
இதுகுறித்து ஹைதராபாதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சுராவரம் சுதாகர் ரெட்டி செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது: கூட்டணி அமைத்துப் போட்டியிடுவது குறித்து மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி மூத்த நிர்வாகி எங்களிடம் பேசினார். 
இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரியுடன் பேச்சுவார்த்தை நடத்தினேன். கூட்டணி குறித்து மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியுடன் எங்கள் 2 கட்சிகளும் கூட்டாக பேச்சுவார்த்தை நடத்த விரும்புகின்றன.
கூட்டணி அமைப்பதில் கர்நாடக மாநில மார்க்சிஸ்ட் கட்சி தலைமையுடன் இணைந்து செயல்படும்படி எங்கள் கட்சியின் கர்நாட மாநில நிர்வாகிகளை வலியுறுத்தியுள்ளேன். 
முன்னாள் பிரதமரும், மதசார்பற்ற ஜனதா தளம் தலைவருமான தேவே கௌடாவும், இடதுசாரி கட்சிகளுடன் கூட்டணி வைக்க தயாராக இருப்பதாக ஏற்கெனவே அறிவித்துள்ளார் என்றார் சுதாகர் ரெட்டி.
224 தொகுதிகளைக் கொண்ட கர்நாடக சட்டப் பேரவையின் பதவிக்காலம் வரும் மே மாதத்துடன் நிறைவடையவுள்ளது. 
இதையடுத்து, அந்த மாநில சட்டப் பேரவைக்கு எந்நேரத்திலும் தேர்தல் நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தத் தேர்தலிலும், 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலிலும் கூட்டணி அமைத்துப் போட்டியிடுவதென்று, மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியும், மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியும் ஏற்கெனவே முடிவு செய்துவிட்டன. அதன்படி, கர்நாடக சட்டப் பேரவைத் தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி 8 தனித் தொகுதிகளிலும், 12 பொதுத் தொகுதிகளிலும் போட்டியிடுவது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com