கேரளத்தில் அரசு மற்றும் தனியார் பேருந்துகளின் கட்டணத்தை அந்த மாநில அரசு புதன்கிழமை உயர்த்தியுள்ளது. இந்த கட்டண உயர்வு வரும் மார்ச் மாதம் 1ஆம் தேதியிலிருந்து அமலுக்கு வரும் என்று கேரள அரசு அறிவித்துள்ளது.
திருவனந்தபுரத்தில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்ற கேரள அமைச்சரவைக் கூட்டத்தில் பேருந்து கட்டணத்தை உயர்த்துவது தொடர்பான முடிவு எடுக்கப்பட்டது. இதுகுறித்து கேரள போக்குவரத்து துறை அமைச்சர் ஏ.கே. சசிந்திரன் செய்தியாளர்களிடம் கூறுகையில், 'பேருந்து கட்டணமானது 8 காசுகள் முதல் ரூ.6 வரையிலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி இனிமேல் சாதாரண பேருந்தில் குறைந்தபட்ச கட்டணமானது ரூ.7லிருந்து ரூ.8 ஆகவும், விரைவு பேருந்தில் குறைந்தபட்ச கட்டணமானது ரூ.10லிருந்து ரூ.11ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. போக்குவரத்து துறையை தொடர்ந்து பராமரிப்பதற்கு இந்த கட்டண உயர்வு மிகவும் அவசியமானதாகும்' என்றார்.
நீதிபதி சி. ராமச்சந்திரன் தலைமையிலான குழு, பேருந்து கட்டண உயர்வு தொடர்பாக கேரள அரசிடம் சில பரிந்துரைகளை அளித்திருந்தது. அந்த பரிந்துரையின்படியே, இந்த கட்டண உயர்வு எடுக்கப்பட்டிருப்பதாக கேரள அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சிகள் கண்டனம்: பேருந்து கட்டணத்தை கேரள அரசு உயர்த்தியிருப்பதற்கு காங்கிரஸ் தலைமையில் செயல்படும் எதிர்க்கட்சிகள் கூட்டணியான ஐக்கிய ஜனநாயக முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சட்டப் பேரவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ரமேஷ் சென்னிதலா கூறுகையில், 'பெட்ரோலியப் பொருட்கள் மீதான வரியை அதிகரித்து, அதிலிருந்து கூடுதல் வருமானத்தை மாநில அரசு ஈட்டி வருகிறது; எனவே, பேருந்து கட்டணத்தை மாநில அரசு நினைத்தால் தவிர்த்திருக்கலாம்' என்றார்.
கேரளத்தில் கடந்த 2014ஆம் ஆண்டில் பேருந்து கட்டணம் கடைசியாக உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.