முன்னாள் மத்திய அமைச்சரும், தெலுங்கு தேசம் கட்சியின் மூத்த தலைவருமான பி.புல்லிராமையா (92), முதுமை சார்ந்த உடல் நலப் பிரச்னைகளால் புதன்கிழமை காலமானார்.
ஆந்திர மாநிலம், தணுக்கு நகரிலுள்ள இல்லத்தில் அவரது உயிர் பிரிந்ததாக தெலுங்கு தேசம் வட்டாரங்கள் தெரிவித்தன.
அவரது மறைவுக்கு, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, துணை முதல்வர் சின்ன ராஜப்பா, நிதியமைச்சர் யானமலா ராமகிருஷ்ணுடு மற்றும் தெலுங்கு தேசம் மூத்த தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். கடந்த 1984 மக்களவைத் தேர்தலில் தெலுங்கு தேசம் சார்பில் போட்டியிட்டு எம்.பி.யாக தேர்வான புல்லிராமையா, எலுரு மக்களவைத் தொகுதியில் தொடர்ந்து 3 முறை எம்.பி.யாக வெற்றி பெற்றார். கடந்த 1996-98 காலகட்டத்தில் அப்போதைய ஐக்கிய முன்னணி ஆட்சியில் மத்திய வர்த்தகத் துறை அமைச்சராக பதவி வகித்தார். 'புல்லிராமையாவின் மறைவு, தெலுங்கு தேசம் கட்சிக்கு பெரிய இழப்பு' என்று முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.