பாகிஸ்தானில் மும்பை பயங்கரவாதத் தாக்குதலுக்கு சதித் திட்டம் தீட்டிய ஹபீஸ் சயீதின் அமைப்புகள் நடத்தி வரும் மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள், மதரஸாக்கள் ஆகியவற்றைக் கையகப்படுத்தும் பணியை பாகிஸ்தான் அரசு தொடங்கியுள்ளது.
ஜமாத்-உத்-தாவா, ஃபாலா-ஐ-இன்சானியத் போன்ற அமைப்புகளுக்கு பாகிஸ்தான் அரசு தடை வித்துள்ளது.
மேலும், அந்த அமைப்பு நடத்தி வரும் மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள், மதரஸாக்கள் ஆகியவற்றைக் கையகப்படுத்தும் பணியையும் அரசு தொடங்கியுள்ளது.
அதன்படி, ராவல்பிண்டி மாவட்டத்தில் ஹபீஸ் சயீதின் அமைப்புகள் நடத்தி வரும் ஒரு பள்ளி மற்றும் 4 மருத்துவமனைகளை கையகப்படுத்துமாறு மாவட்ட நிர்வாகத்துக்கு பஞ்சாப் மாகாண அரசு புதன்கிழமை உத்தரவிட்டது. மேலும், அந்தக் கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவமனைகளின் பட்டியலையும் மாவட்ட நிர்வாகத்திடம் அரசு வழங்கியது.
இவ்வாறு கையகப்படுத்தும் மருத்துவமனைகள் மற்றும் கல்வி நிறுவனங்களை, முஸ்லிம் நலவாரியத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் பஞ்சாப் மாகாண அரசு உத்தரவிட்டிருந்தது.
அதைத் தொடர்ந்து, அந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள கல்வி நிறுவனங்களுக்கு மாவட்ட நிர்வாக அதிகாரிகள் குழுவினர் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.
இதேபோல், அட்டோக், சோக்வால், ஜெலூம் ஆகிய மாவட்டங்களிலும் ஹபீஸ் சயீதின் அமைப்புகளுக்குச் சொந்தமான மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்களைக் கையகப்படுத்தும் பணி தொடங்கப்படவுள்ளது என்று மாவட்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.