உத்தரகண்ட் மாநிலம், ரிஷிகேஷில் யோகாசனப் பயிற்சி வகுப்பு 2 மாத காலம் இலவசமாக வழங்கப்படும் என்று யோக-வேதாந்த வன அகாதெமி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த அகாதெமி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
பல்வேறு யோகாசனங்கள் குறித்து அடிப்படை அறிவைப் பெறும் நோக்கில், ஆண்டுதோறும் இலவச வகுப்பு நடத்தப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு மே 4-ஆம் தேதி முதல் ஜூன் 30-ஆம் தேதி வரை இந்த வகுப்பு நடைபெறவுள்ளது. 20 வயது முதல் 65 வயதுக்குள்பட்ட ஆண்கள் இந்தப் பயிற்சியில் பங்குபெற விண்ணப்பிக்கலாம். வகுப்பு ஆங்கிலத்தில் நடத்தப்படும். அதனால், இலவசப் பயிற்சியில் சேர விரும்புபவர்கள் ஆங்கிலத்தில் பேசவும், எழுதவும், படிக்கவும் நன்கு தெரிந்தவர்களாக இருக்க வேண்டும். தங்குவதற்கும் அவர்கள் இலவசமாக அனுமதிக்கப்படுவார்கள். இதற்கான விண்ணப்பங்களை சிவானந்தாஆன்லைன் டாட் ஓஆர்ஜி என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். விண்ணப்பங்களை பூர்த்தி செய்து மார்ச் 20-ஆம் தேதிக்குள் கீழ்க்கண்ட முகவரிக்கு தபால் மூலம் அனுப்ப வேண்டும்.
தி யோகா-வேதாந்த ஃபாரஸ்ட் அகாதெமி, தி டிவைன் லைஃப் சொசைட்டி, சிவானந்தநகர்- 249192, தேரி-கர்வால் மாவட்டம், உத்தரகண்ட். தொலைபேசி: 0135-2433541. தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் மட்டுமே வகுப்பில் கலந்துகொள்ளலாம். தங்களுடன் குடும்ப உறுப்பினர்கள் யாரையும் அவர்கள் அழைத்து வரக் கூடாது.
இந்திய மற்றும் மேற்கத்திய தத்துவம், உபநிஷத்துகள், பகவத் கீதை, பதஞ்சலி யோகா, நாரத பக்தி, சூத்திரங்கள், சுவாமி சிவானந்தா அருளிய தத்துவங்கள் உள்ளிட்ட பாடங்கள் எடுக்கப்படும்.
ஆசனங்கள், பிராணாயாமம், கர்ம யோகம், குழு கலந்துரையாடல், கேள்வி, பதில்கள், இறுதித் தேர்வு ஆகியவை இந்த வகுப்பில் அடங்கும் என்று அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.