புதுதில்லி: தில்லியில் ஞாயிறன்று நடைபெற்ற பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைமை அலுவலக கட்டடத் திறப்பு விழாவில், பிரதமர் மோடி மற்றும் கட்சியின் தேசியத் தலைவர் அமித்ஷா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தில்லி அசோகா சாலையில் தற்பொழுது பாஜக தலைமை அலுவலகம் செயல்பட்டு வருகிறது.ஆனால் இங்கு போதுமான இட வசதி இல்லை என்று தொடர்ந்து கருத்துகள் தெரிவிக்கப்பட்டு வந்தது. எனவே பிரமாண்டமாக ஒரு புதிய கட்டடம் கட்டுவது என்று கட்சித் தலைமை முடிவு செய்தது.
இதற்கென தில்லி தீன்தயாள் உபாத்யாய் மார்க்கில் 2 ஏக்கர் இடம் தேர்வு செய்யப்பட்டது. இதற்காக கடந்த 2016 ஆம் ஆண்டு 70 அறைகளைக் கொண்ட புதிய அலுவலக கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு தற்பொழுது கட்டடம் கட்டி முடிக்கப்பட்டு திறப்பு விழா நடைபெற்றுள்ளது.
இந்த புதிய அலுவலகமானது 3 பிளாக்குகள் கொண்டதாக கட்டப்பட்டுள்ளது. இங்கு வை-பை வசதியுடன் 450 பேர் பங்கேற்கும் வகையில் பிரமாண்ட மீட்டிங் ஹால்,விடியோ கான்பரன்சிங் உள்ளிட்ட வசதிகளுடன் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஞாயிறன்று நடைபெற்ற புதிய கட்டிட திறப்பு விழாவில் பிரதமர் மோடி, பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.