பஞ்சாப் நேஷனல் வங்கியில் (பிஎன்பி) நடந்துள்ள ரூ.11,400 கோடி ஊழல் குறித்து பிரதமர் நரேந்திர மோடியும், மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லியும் விளக்கமளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி கேட்டுக் கொண்டுள்ளார்.
இதுகுறித்து சுட்டுரை சமூக வலைதளப் பக்கத்தில் அவர் வெளியிட்ட பதிவுகளில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
தேர்வுகளில் எப்படி தேர்ச்சி பெறுவது என்பது குறித்து 2 மணி நேரமாக குழந்தைகளுக்கு (மாணவர்களுக்கு) பிரதமர் மோடி விளக்கமளிக்கிறார்.
ஆனால், வங்கிகளில் நடந்துள்ள ரூ.22,000 கோடி ஊழல் குறித்து 2 நிமிடம் கூட பேச மறுக்கிறார். மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லியோ, ஓடி ஒளிகிறார்.
நீங்கள் குற்றவாளி என்பது போன்ற செயல்பாட்டை நிறுத்திக் கொள்ளுங்கள்.
என்ன நடந்தது என்பதை விளக்குங்கள் என்று அந்தப் பதிவுகளில் ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.
இந்த விவகாரம் குறித்து காங்கிரஸ் கட்சி கடந்த வியாழக்கிழமை கருத்து தெரிவித்தபோது, பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.11,400 கோடி மோசடி செய்த வைர வியாபாரி நீரவ் மோடி, டாவோஸ் நகரில் பிரதமர் நரேந்திர மோடியுடன் பிரபல தொழிலதிபர்கள் புகைப்படம் எடுத்தபோது உடனிருந்ததை சுட்டிக்காட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.