லக்னௌ: அரசு பொதுத் துறை வங்கிகளில் ரூ.800 கோடி அளவுக்கு கடன் வாங்கி மோசடியில் ஈடுபட்ட ரோட்டாமாக் நிறுவனத்தின் நிர்வாகி விக்ரம் கோத்தாரி கைது செய்யப்பட்டார்.
ரூ.800 கோடி கடன் வாங்கி திருப்பி செலுத்தாதது தொடர்பாக சிபிஐ நேற்று முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டதை அடுத்து, விக்ரம் கோத்தாரியின் வீடு, அலுவலகம் உள்ளிட்ட 3 இடங்களில் இன்று காலை 4 மணி முதல் சோதனை நடைபெற்று வந்தது.
சோதனையின் போது விக்ரம் கோத்தாரி, அவரது மனைவி மற்றும் மகனிடம் சிபிஐ அதிகாரிகள் முதற்கட்ட விசாரணையை நடத்தினர். விசாரணையின் முடிவில் விக்ரம் கோத்தாரி கைது செய்யப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ரோட்டாமாக் பேனா நிறுவனத்தின் உரிமையாளரான விக்ரம் கோத்தாரி, இந்திய வங்கிகளில் ரூ.800 கோடி கடன் வாங்கி திருப்பி செலுத்தாத நிலையில் அவர் எங்கிருக்கிறார் என்பதே தெரியவில்லை என்று நேற்று ஊடகங்களில் செய்தி வெளியானது.
இந்த செய்திகளை மறுத்திருந்த கோத்தாரி, ரூ.800 கோடி விவகாரம் என்பது மோசடியல்ல. நான் எங்கும் ஓடிவிடவில்லை. நான் ஒரு இந்திய பிரஜை. என் நாட்டின் மீது பற்று கொண்டவன். நான் கடனை திருப்பிச் செலுத்தாதவன் என்று வங்கிகள் அறிவிக்கவில்லை. என் நிறுவனத்தை லாபம் ஈட்டாத நிறுவனம் என்றே அறிவித்துள்ளன. இந்த வழக்கு தீர்ப்பாயத்தில் இன்னும் நிலுவையில் உள்ளது. நான் தொடர்ந்து வங்கிகளுடன் பேசி வருகிறேன். அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கிறேன். கடன்களை நிச்சயம் திருப்பி செலுத்துவிடுவேன் என்று கூறியுள்ளார்.
கிடைத்திருக்கும் தகவல்களின் அடிப்படையில், அலகாபாத் பேங்க், பேங்க் ஆப் இந்தியா, பேங்க் ஆப் பரோடா, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி உள்ளிட்ட 5 அரசு வங்கிகளில் இந்நிறுவனம் சார்பில் ரூ.800 கோடி அளவுக்குக் கடன் வாங்கி திருப்பி செலுத்தாமல் இருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்திய வங்கிகளில் நடந்துள்ள மோசடிகள் குறித்த செய்திகள் ஒவ்வொரு நாளும் வந்தவண்ணம் உள்ளது. இந்திய ரிசர்வ் வங்கியிடம் இருக்கும் புள்ளி விவரங்கள், கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் இந்திய வங்கிகளில் ரூ.61,260 கோடி மோசடி நடந்திருப்பதாக தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.