புது தில்லி: யூனிசெஃப் மேற்கொண்ட ஆய்வில் இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 6 லட்சம் குழந்தைகள் பிறந்த 28 நாட்களுக்குள் இறந்துவிடுவது தெரிய வந்துள்ளது.
உலகிலேயே, பிறந்த சிசுக்களின் உயிரிழப்பில் இந்தியா முதலிடத்தில் இருப்பதாகவும், இந்த சிசுக்களின் உயிரிழப்புகள் 80 சதவீத அளவுக்கு குணப்படுத்தக்கூடிய நோய்களாலேயே நிகழ்வதாகவும், சிசுக்களின் மரணம் எந்த மோசமான நோயின் காரணமாகவும் ஏற்படுவதில்லை என்ற அதிர்ச்சித் தகவலையும் தெரிவித்துள்ளது.
அதே சமயம் மற்றொரு தகவல் என்னவென்றால், இந்தியா சமீபகாலத்தில் 5 சதவீதம் அளவுக்கு சிசுக்கள் மரண விகிதத்தைக் குறைத்திருப்பதுதான். இந்தியாவில் சிசுக்களின் மரணம் ஏற்றுக் கொள்ள முடியாத அளவுக்கு அதிகமாக இருக்கிறது. இந்தியாவில் ஆண்டுதோறும் 6 லட்சம் சிசுக்கள் மரணம் அடைகின்றன. இது உலக அளவில் நிகழும் சிசு மரணத்தில் கால்பங்காகும் என்று யூனிசெஃப் கூறியுள்ளது.
184 நாடுகளில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், இந்தியா 31வது இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு மிக மோசமான சிசுக்கள் மரணத்தைக் கொண்டிருந்ததால் இந்தியா 28வது இடத்தில் இருந்தது.
உலக அளவில், ஆயிரம் குழந்தைகள் பிறந்தால் அதில் 19 சிசுக்கள் ஒரு மாத காலத்தக்குள் மரணித்துவிடுவதாகவும், பிறந்த சிசுவுக்கு முதல் ஒரு மாத காலம்தான் மிக முக்கியமான தருணம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.