மும்பை: நாடு முழுவதும் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி கிளைகளில் 18000 ஊழியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டிருப்பதாக தேசிய வங்கி ஊழியர் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
பஞ்சாப் நேஷனல் வங்கியின் மும்பை கிளை ஒன்றில் நடைபெற்ற ரூ.11300 கோடி ஊழலானது நாட்டையே உலுக்கியது. இந்நிலையில் நாடு முழுவதும் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி கிளைகளில் 18000 ஊழியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டிருப்பதாக தேசிய வங்கி ஊழியர் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
பஞ்சாப் நேஷனல் வங்கி ஊழல் விவகாரம் வெளி வந்த பிறகு கடந்த திங்கள்கிழமை அன்று மத்திய கண்காணிப்பு ஆணையமானது சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில் "நாடு முழுவதும் உள்ள பொதுத்துறை வங்கிகளில், எந்த ஒரு அதிகாரியும் குறிப்பிட்ட ஒரு பதவியில் மூன்று வருடங்கக்ளுக்கு மேல் பதவி வகிக்கக் கூடாது அதே போல் குறிப்பிட்ட நகராட்சி எல்லைக்குள்ளும் ஐந்து வருடங்களுக்கு மேல் பணிபுரியக் கூடாது." என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி டிசம்பர் 31, 2017 அன்று குறிப்பிட்ட ஒரு கிளையில் மூன்று வருடங்களை பூர்த்தி செய்தவர்களை உடனடியாக இட மாற்றம் செய்யுமாறு அதில் அறிவுறுத்தப்பட்டிருந்தது. அதனைப் பின்பற்றி நாடு முழுவதும் பஞ்சாப் நேஷனல் வங்கியின் 7000 கிளைகளில் 70000 ஊழியர்களுக்கு மேல் பணிபுரிந்து வருகின்றனர். அவர்களில் 18000 பேர் அதாவது மொத்த ஊழியர்களில் 25% பேர் தற்பொழுது இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
குறிப்பிட்ட ரூ.11300 கோடி ஊழலில் ஈடுபட்ட ப்ரடி ஹவுஸ் கிளை மேலாளரான கோகுல்நாத் ஷெட்டி அக்கிளையில் ஏழு வருடங்களாக பணியாற்றி வந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.