லக்னௌ: உத்தரபிரதேசத்தில் அரசு விழா ஒன்றில் ரிப்பன் வெட்ட கத்தரிக்கோல் தரப்படாத காரணத்தால், பாஜக மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி ரிப்பனை ஆத்திரத்தில் கிழித்து எறிந்த விட்டுச் சென்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது.
பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களிலொருவர் முரளி மனோகர் ஜோஷி. இவர் கான்பூர் தொகுதி எம்.பி.யாக இருக்கிறார். இந்நிலையில் கான்பூர் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சோலார் விளக்குகளை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சிக்கு அவர் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார்.
நிகழ்வில் சோலார் மின் கம்பத்தின் முன்னாள் கலர் ரிப்பன் கட்டப்பட்டு தயாராக இருந்தது. ஆனால் முரளி மனோகர் ஜோஷி வந்து நீண்ட நேரமாகியும் ரிப்பன் வெட்ட கத்தரிக்கோல் தரப்படவில்லை. காத்திருந்து கோபத்தின் உச்சிக்குச் சென்ற அவர். அந்த ரிப்பனை தனது கையால் கிழித்து கீழே போட்டார்.
அத்துடன் அங்கிருந்த ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளை கடிந்து கொண்டார். சிறிது நேரத்திற்கு பின்னர், கத்தரிக்கோல் கொண்டு வரப்பட்டு, ரிப்பன் மீண்டும் கட்டப்பட்டது. ஆனால் ஆத்திரம் தீராத முரளி மனோகர் ஜோஷி அங்கிருந்து கோபத்துடன் புறப்பட்டுச் சென்று விட்டார். இது அங்கிருந்தோர்க்கு அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது .