பயங்கரவாதத்தை ஒழிப்பதில் இந்தியா, கனடா இணைந்து செயல்படும்: பிரதமர் நரேந்திர மோடி

சர்வதேச பயங்கரவாதத்தை ஒழிப்பதில் இந்தியா, கனடா இணைந்து செயல்படும் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.
பயங்கரவாதத்தை ஒழிப்பதில் இந்தியா, கனடா இணைந்து செயல்படும்: பிரதமர் நரேந்திர மோடி

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, தனது மனைவி, 3 குழந்தைகளுடன் இந்தியாவுக்கு 7 நாள் பயணமாக பிப்ரவரி 17-ஆம் தேதி வருகை தந்தார். பின்னர் தாஜ்மகால், காந்தி ஆசிரமம், தங்க கோயில் உள்ளிட்ட இடங்களுக்குச் சென்று பார்வையிட்டார்.

இதைத் தொடர்ந்து, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது குடும்பத்துடன் வெள்ளிக்கிழமை காலை ஜனாதிபதி மாளிகை வந்தார். அவருக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு மற்றும் முப்படை அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி அவர்களை வரவேற்றார். பின்னர் காந்தியின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.  

இந்த சந்திப்பின் போது பிரதமர் நரேந்திர மோடியுடன் முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, இரு நாடுகளின் இடையே பாதுகாப்பு விவகாரம், பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கை ஆகியவற்றில் நிலவும் உறவை விரிவுப்படுத்துவது குறித்து ஆலோசனை மேற்கொண்டனர். இருநாடுகள் இடையிலான பொருளாதார ஒத்துழைப்பு உள்ளிட்ட 6 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

இந்த சந்திப்பு குறித்து பிரதமர் நரேந்திர மோடி கூறியதாவது:

இந்தியாவும், கனடாவும் இணைந்து சர்வதேச பயங்கரவாதத்துக்கு எதிராகப் போராடும். ஏனெனில் இந்தியா மற்றும் கனடா பயங்கரவாத செயல்களால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த சந்திப்பின் மூலம் அதனை ஒழிக்கும் விதமாக செயல்படுவது தொடர்பாக ஒற்றுமையுடன் செயல்பட ஆலோசித்தோம். யாராவது தங்களின் அரசியல் லாபத்துக்காக மதத்தின் பெயரால் இந்த சமூகத்தில் பயங்கரவாதத்தை பரப்ப நினைத்தால் அது முறியடிக்கப்படும்.

இரு நாடுகளின் இடையே பாதுகாப்பு விவகாரம், பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கை பொருளாதார ஒத்துழைப்பு உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் பரிசீலிக்கப்பட்டுள்ளன. இனி வரும் காலங்களில் இருநாடுகளின் உறவும் பிரகாசமாக அமையும். உலகளவில் எரிசக்தி உற்பத்தியில் கனடா முதன்மையான நாடாக திகழ்கிறது.

தற்போது இந்தியாவுக்கு எரிசக்தியின் தேவை அதிகரித்து வருகிறது. எனவே அதனை பூர்த்தி செய்யும் விதமாக ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டன. அதுபோல உயர்கல்விக்காக இந்திய மாணவர்கள் அதிகம் விரும்பும் நாடாகவும் கனடா உள்ளது. இங்கு சுமார் 1,20,000 இந்திய மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். எனவே உயர்கல்வி தொடர்பாகவும் சில ஒப்பந்த நடவடிக்கைகளை ஏற்படுத்தியுள்ளோம். இதன்மூலம் மாணவர்களின் எதிர்காலம் சிறப்பாக அமையும் விதமாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com