தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான (பி.எஃப்.) வட்டி விகிதம் மீண்டும் குறைக்கப்பட்டதற்கு பஞ்சாப் நேஷனல் வங்கியில் நடைபெற்ற ஊழலே காரணம் என்று மேற்கு வங்க முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி குற்றம்சாட்டினார்.
இது தொடர்பாக, அவர் மேற்கு வங்கத்தின் வடக்கு தினாஜ்பூர் மாவட்டத்தில் உள்ள ஹேம்தாபாதில் வியாழக்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசியது:
பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.11,400 கோடி ஊழல் நடைபெற்றுள்ளது. இதன் காரணமாகவே பி.எஃப் வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி கடந்த 2014இல் ஆட்சிக்கு வந்தபோது பி.எஃப் வட்டி விகிதம் 8.82 சதவீதமாக இருந்தது. இது தற்போது 8.55 சதவீதமாகக் குறைந்துள்ளது. இவ்வாறு வட்டி விகிதம் குறைக்கப்பட்டதால் உழைக்கும் வர்க்கம் பெரிதும் பாதிக்கப்படும்.
எங்கு கொள்ளைநடந்தாலும் அந்தக் கணக்கை சரிசெய்வதற்கு மக்களின் பையில் இருந்துதான் பணம் எடுக்கப்படுகிறது. அவ்வாறு தற்போது பி.எஃப். வட்டி விகிதத்தில் 0.10 சதவீத வட்டிக் குறைப்பால் சாமானிய மனிதனுக்கு ஏற்படும் இழப்பை எண்ணிப் பாருங்கள். விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் பணத்தை ப் பறித்து அவர்களை பணமில்லாதவர்களாக மாற்றுவதே பாஜகவின் கொள்கையாகும்.
பொதுத்துறை வங்கிகளில் பல்வேறு சேமிப்புத் திட்டங்களிலும் வட்டிக்குறைப்பு செய்யப்பட்டுள்ளதால் மூத்த குடிமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். பிஎஃப் மற்றும் சிறு சேமிப்பு ஆகியவற்றின் வட்டி விகிதங்களை இந்த அரசு பெருமளவில் குறைத்துள்ளது. தாங்கள் வங்கிகளில் செலுத்தியுள்ள பணம் தங்களுக்கு கிடைக்குமா என்பதே மக்களுக்குத் தெரியவில்லை.
ஒரு விவசாயி தாம் பெற்ற கடனைத் திருப்பிச் செலுத்த முடியாதபோது அவரது நிலமோ வீடோ பறிமுதல் செய்யப்படுகிறது. மாறாக அரசின் உடந்தையோடு வங்கிகள் கொள்ளையடிக்கப்பட்டால் அதற்கு யார் பொறுப்பேற்பது?
மத்திய பாஜக அரசின் கீழ் மக்கள் பாதுகாப்பாக இல்லை. தற்போதை அரசின் ஆட்சியில் மக்களுக்கு சமூகப் பாதுகாப்போ, நிதிப் பாதுகாப்போ இல்லை என்றார் மம்தா.