சர்வதேச நிதி நடவடிக்கை சிறப்புக் குழு (எஃப்ஏடிஎஃப்) துணைத் தலைவர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள சீனாவுக்கு இந்தியா வாழ்த்துத் தெரிவித்துள்ளது.
பயங்கரவாதிகளுக்கு நிதி செல்வதைத் தடுக்கவும், அவர்களது நிதிக் கட்டமைப்புகளை முடக்கவும் சர்வதேச நிதி நடவடிக்கை சிறப்புக் குழு (எஃப்ஏடிஎஃப்) அமைக்கப்பட்டுள்ளது. இந்த சர்வதேச அமைப்பின் கூட்டம் பாரீஸில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் அமைப்பின் துணைத் தலைவராக சீனா தேர்வு செய்யப்பட்டது.
இது தொடர்பாக மத்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரவீஸ் குமார் சுட்டுரையில் (டுவிட்டர்) வெளியிட்டுள்ள பதிவில், "சர்வதேச நிதி நடவடிக்கை சிறப்புக் குழு துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள சீனாவுக்கு வாழ்த்துகள். பயங்கரவாதிகளுக்கு எதிரான முக்கிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் இந்த அமைப்பை சீனா சிறப்பாக வழி நடத்திச் செல்லும் என்று இந்தியா உறுதியாக நம்புகிறது' என்று தெரிவித்துள்ளார்.
கருப்புப் பணம் உருவாக்கம்தான் பயங்கரவாதிகளுக்கு பல்வேறு நிதியாக சென்று சேர்கிறது. எனவே, இதனைத் தடுக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சர்வதேச நிதி நடவடிக்கை சிறப்புக் குழு கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது.
பயங்கரவாதத்துக்கு நிதி அளிக்கப்படும் விவகாரத்தில், கண்காணிக்கப்பட வேண்டிய நாடுகள் பட்டியலில் பாகிஸ்தான் இதுவரை சேர்க்கப்படவில்லை. பாகிஸ்தானில் இருந்து செயல்படும் பயங்கரவாத அமைப்புகளை முற்றிலுமாக முடக்க அந்த நாட்டுக்கு வரும் ஜூன் மாதம் வரை கால அவசாகம் அளிக்கப்பட்டுள்ளது.
இராக், சிரியா, ஏமன், டூனிசியா ஆகிய நாடுகள் ஏற்கெனவே கண்காணிக்கப்படும் நாடுகள் பட்டியலில் உள்ளன. பாகிஸ்தானையும் அப்பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று அமெரிக்கா மற்றும் சில ஐரோப்பிய நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.