தில்லி விமான நிலையத்தில் ரூ.92 லட்சம் தங்கக் கட்டிகளுடன் சீனப் பயணியை சுங்கத் துறையினர் கைது செய்தனர்.
இது தொடர்பாக சுங்கத் துறை அதிகாரி ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:
ஹாங்காங்கில் இருந்து தில்லிக்கு புதன்கிழமை வழக்கம்போல் பயணிகள் விமானம் வந்தது. அதில் பயணித்த பயணி ஒருவரின் உடைமைகள் சோதனையிடப்பட்டன. அவர் அணிந்திருந்த ஜீன்ஸ் ஆடையின் உள்பகுதியில் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டிருந்த பகுதியில் 3 கிலோ எடையுள்ள மூன்று தங்கக் கட்டிகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவர் கைது செய்யப்பட்டார். விசாரணையில் அவர் சீனாவைச் சேர்ந்தவர் எனத் தெரியவந்தது. மீட்கப்பட்ட தங்கத்தின் மதிப்பு ரூ.91 லட்சத்து 88 ஆயிரமாகும்.
கடந்த பிப்ரவரி 10-ம் தேதி இந்தியாவுக்குள் தங்கத்தை கடத்த முயன்றதாக தில்லி விமான நிலையத்தின் சுங்கத் துறையினர் நான்கு சீனர்களைக் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 10 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. தைவானில் இருந்து ஹாங்காங் வழியாக தில்லிக்கு வந்தபோது அந்த நால்வரும் சுங்கத் துறையினரால் மடக்கிப் பிடிக்கப்பட்டனர். அவர்களிடமிருந்து ரூ.3 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.