"பிரதமர் நரேந்திர மோடி வரும் 2022-ஆம் ஆண்டுக்கான கனவுகளை விற்று வருகிறார். ஆனால், தாம் 2019ஆம் ஆண்டில் மக்களவைத் தேர்தலை எதிர்கொள்ள நேரிடும் என்பதை அவர் மறந்து விட்டார்' என்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான தாரிக் அன்வர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பிகார் மாநிலம் கடிஹார் நகரில் செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியது:
நரேந்திர மோடி அரசு வரும் 2022-ஆம் ஆண்டுக்குள் ஏழ்மை, ஊழல், மதவாதம், ஜாதியவாதம், பயங்கரவாதம் ஆகியவை இல்லாத புதிய இந்தியாவை உருவாக்கும் லட்சிய கனவுத் திட்டத்தை முன்வைத்துள்ளது. இது தற்போதைய அரசின் பதவிக் காலத்தைத் தாண்டி 3 ஆண்டுகளுக்கு அப்பாற்பட்ட இலக்காகும்.
பிரதமர் இந்த நாட்டு மக்களுக்கு 2022-ஆம் ஆண்டுக்கான கனவைக் காட்டி வருகிறார். ஆனால் 2019 மக்களவைத் தேர்தலிலேயே புதிய தீர்ப்பு (பாஜகவுக்கு பதில் வேறு கட்சி ஆட்சி) வந்துவிடும் என்பதை அவர் புரிந்து கொள்ள வேண்டும்.
மத்திய அரசும், பிகார் மாநில அரசும் மக்களிடையே செல்வாக்கையும் ஆதரவையும் இழந்து விட்டன.
பிகாரில் அடுத்த மாதம் நடைபெற உள்ள மூன்று தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் ராஜஸ்தான் இடைத்தேர்தலில் ஏற்பட்ட முடிவே ஏற்படும். ராஜஸ்தானில் அண்மையில் நடைபெற்ற மூன்று தொகுதி இடைத் தேர்தலில் பாஜக தோல்வியடைந்தது. அங்கு காங்கிரஸ் வெற்றி பெற்றது. அதேபோல் பிகாரில் அடுத்த மாதம் நடைபெற உள்ள இடைத் தேர்தலில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம்-பாஜக கூட்டணி தோல்வியைத் தழுவும். பஞ்சாப் நேஷனல் வங்கி முறைகேடு குறித்து விசாரிப்பதற்கு நாடாளுமன்ற கூட்டுக் குழுவை அமைக்க வேண்டும் என்றார் அவர்.