இந்தியா, பாகிஸ்தான் இடையிலான எல்லைப் பிரச்னை தீவிரமடைந்து வருகிறது. அங்கு தினந்தோறும் நடைபெறும் தாக்குதல் சம்பவங்களால், ராணுவம், எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் உயிரிழந்து வருகின்றனர்.
பாகிஸ்தான் இதுபோன்று அத்துமீறி நடத்தும் தாக்குதல் சம்பவங்களுக்கு இந்திய ராணுவத்தால் தக்க பதிலடி அளிக்கப்பட்டு வருகிறது. பாகிஸ்தானின் இந்த செயலுக்கு இந்திய அரசு தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகிறது.
இதுபோன்று ஞாயிற்றுக்கிழமையும் இந்திய எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் மற்றும் பயங்கரவாத அமைப்புகள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டது. இருவேறு இடங்களில் நடந்த இந்த சம்பவங்களின் காரணமாக இந்திய ராணுவ வீரர்கள் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஜம்மு-காஷ்மீர் எல்லைப் பகுதியில் உள்ள புலவாமோ என்ற இடத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 5 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இதையடுத்து நடத்தப்பட்ட பதில் தாக்குதலில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
அதுபோல நோவ்ஷேரா பகுதியில் பாகிஸ்தான ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தார். இச்சம்பவங்களை அடுத்து ராணுவ தளபதிகளுடன் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் பேசியதாவது:
பாகிஸ்தான் ராணுவத்தாலும், பயங்கரவாத அமைப்புகளாலும் நடத்தப்பட்ட இதுபோன்ற அத்துமீறிய தாக்குதல் சம்பவங்கள் அவர்களின் கோழைத்தனத்தை எடுத்துக்காட்டுகிறது. இதில் உயிரிழக்கும் ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு அரசு நிச்சயம் துணை நிற்கும். எல்லையில் உயிரிழக்கும் ராணுவ வீரர்களின் வீரத்துக்கு அரசு தலைவணங்குகிறது. அவர்களின் இந்த உயிர்தியாகம் வீண்போகாது. இதற்கான விளைவுகளை நிச்சயம் சம்பந்தப்பட்டவர்கள் சந்திக்க நேரிடும் என்றார்.