மலப்புரம்: ஆண் துணையின்றி பெண்கள் தனியாக ஹஜ் பயணம் மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டிருக்கும் நிலையில், கேரளாவில் இருந்து 1,124 பெண்கள் ஹஜ் பயணத்துக்கு ஆயத்தமாகிவிட்டனர்.
பெண்களுக்கு எதிரான பல தடைகள் உடைபட்டு வரும் வேளையில், ஹஜ் பயணம் செய்ய ஆண் துணையின்றி பெண்கள் வரலாம் என்ற அனுமதி முக்கியத்துவம் பெறுகிறது.
அந்த வகையில், பல மைல்களை கடந்து, தனது கணவரோ அல்லது மகனின் துணையோ இன்றி ஹஜ் பயணம் மேற்கொள்ளவிருப்பது குறித்து கோட்டக்கல்லைச் சேர்ந்த 60 வயது வெள்ளேகட்டில் பத்துட்டே என்ற பெண் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளார்.
இந்த ஆண்டுதான் முதல் முறையாக ஆண் துணையின்றி பெண்கள் ஹஜ் செல்ல இந்திய ஹஜ் ஆணையம் அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து, கேரளாவில் இருந்து 1,124 பெண்கள் குழு, ஆண் துணையின்றி கிளம்ப தயாராக உள்ளனர்.
இதுவரை வெறும் சிகிச்சைக்காக மட்டுமே எனது பயணம் இருந்துள்ளது. அதுவும் கோட்டக்கல், மலப்புரம், மஞ்சேரி வரைதான். தற்போது முதல் முறை மெக்கா நோக்கி அதுவும் ஆண் துணையின்றி செல்கிறேன். ஆனால் எந்த பயமும் இல்லை, என்னுடன் உறவினர்கள் இருக்கிறார்கள் என்கிறார் பத்துட்டே.