மனாமா: காங்கிரஸ் தலைவரானவுடன் தனது முதல் வெளிநாட்டுப் பயணத்தை மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி, சுற்றுப் பயணத்தின் ஒரு பகுதியாக பஹ்ரைன் மன்னரைச் சந்திக்க உள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக ராகுல் காந்தி சமீபத்தில் பொறுப்பேற்றுள்ளார். பின்னர் அனைத்து மாநிலங்களிலும் கட்சி அமைப்பை பலப்படுத்துவது தொடர்பாக கட்சி நிர்வாகிகளுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில் காங்கிரஸ் தலைவரானவுடன் தனது முதல் வெளிநாட்டுப் பயணமாக ராகுல் காந்தி ஞாயிறன்று பஹ்ரைன் நாட்டுக்கு புறப்பட்டுச் சென்றார். அங்கு திங்களன்று நடைபெறும் இந்திய வம்சாவளியினருக்கான சர்வதேச அமைப்பின் மாநாட்டில் சிறப்பு விருந்தினராக அவர் கலந்து கொள்கிறார். இவ்விழாவில் ராகுலுடன் வெளிநாடுகளில் வாழும் சுமார் 50 இந்திய வம்சாவளி பிரபலங்களும் பங்கேற்கின்றனர்.
பஹ்ரைன் அரசின் விருந்தினராக அங்கு சென்றுள்ள ராகுல் காந்தி, பஹ்ரைன் மன்னர் ஹமாஸ் பின் ஈசா அல் கலிபா-வை சந்தித்துப் பேசுவார் என தில்லி காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.