மீரட்: மீரட் நகர்மன்ற அவைக் கூட்டத்தில் பாரதிய ஜனதா உறுப்பினர்கள் டேப்பில் 'வந்தே மாதரம்' பாடலை ஒலிக்கச் செய்ததால், அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் உறுப்பினர்கள் அவர்களுடன் கைகலப்பில் ஈடுபட்டனர்.
புதிதாகத் தேர்தெடுக்கப்பட்டுள்ள மீரட் நகர்மன்றத்தின் முதல் அவைக் கூட்டம் திங்களன்று நடைபெற்றது. அப்பொழுது பாரதிய ஜனதா கட்சியினைச் சேர்ந்த நகர்மன்ற உறுப்பினர்கள், தேசிய பாடலான 'வந்தே மாதரம்' பாடலை டேப்பில் ஒலிக்கச் செய்தனர். பாடல் துவங்கியதுமே அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியினைச் சேர்ந்த இஸ்லாமிய உறுப்பினர்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.
உடனேயே தேசியப் பாடலை சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியினைச் சேர்ந்த இஸ்லாமிய உறுப்பினர்கள் அவமதிப்பு செய்து விட்டதாக குற்றம் சாட்டி, பாஜக உறுப்பினர்கள் கோஷங்கள் எழுப்பினர். அதற்குப் போட்டியாக, சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி உறுப்பினர்கள், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பினர்.
இதன்காரணமாக பாஜக மற்றும் இதர உறுப்பினர்களுக்கு இடையே அங்கு கைகலப்பு மூண்டது. இதன் காரணமாக அவையில் சிறிதுநேரம் பரபரப்பு நிலவியது.
வந்தே மாதரம் பாடலைப் பாடுவது மற்றும் உருது மொழியில் பதவியேற்பு என மீரட் நகரசபையில் பிரச்னைகள் தொடந்து நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது
விடியோ: