ஸ்ரீநகர்: நாடாளுமன்ற தாக்குதலில் குற்றவாளி என்று கூறி தூக்கிலிடப்பட்ட அஃப்சல் குருவின் மகன் கலீப் குருவும், பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்ட புர்ஹன் வானியின் சகோதரர் நவீத் ஆலமும் +2 பொதுத் தேர்வில் முதலிடம் பிடித்துள்ளனர்.
அஃசல் குருவின் மகன் கலீப் குரு அறிவியல் பாடப் பிரிவில் 500க்கு 441 மதிப்பெண்கள் ( 88 சதவீதம்) பெற்றுள்ளார். இவர் 10ம் வகுப்புத் தேர்விலும் மாநில அளவில் சாதனை படைத்த மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கலீப்பின் தந்தையான மொஹம்மது அஃசல் குரு, 2001ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தாக்குதலில் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டு, 2013ம் ஆண்டு பிப்ரவரி 9ம் தேதி திகார் சிறையில் ரகசியமாக தூக்கிலிடப்பட்டு சிறைக்குள்ளேயே புதைக்கப்பட்டார்.
எக்ஸ்பிரஸ் செய்தியாளரிடம் பேசிய கலீப், +2 பொதுத் தேர்வில் 441 மதிப்பெண்கள் எடுத்திருக்கும் இந்த மகிழ்ச்சியான தருணத்தில், எனது தந்தையின் அணைப்பு கிடைக்காமல் நான் மிகவும் வருந்துகிறேன் என்கிறார்.
எனது தந்தையை நினைத்து நான் வருத்தமுற்றபோது, எனது தாயும், உறவினர்களும் என்னைத் தேற்றினர். எனது படிப்பில் கவனத்தை செலுத்துமாறு என்னை வலியுறுத்தினர்.
நான் மருத்துவர் ஆக வேண்டும் என்பதே லட்சியம். மருத்துவ நுழைவுத் தேர்வுக்காக தயாராகி வருகிறேன். நிச்சயம் மருத்துவர் ஆவேன் என்று நம்பிக்கையோடு கூறுகிறார்.
நரம்பியல் மருத்துவர் ஆகி, ஏழைகளுக்கும், தேவைப்படுவோருக்கும் சேவை செய்ய வேண்டும். நான் மருத்துவராகி, ஏழைகளுக்கு சேவை செய்ய வேண்டும் என்றே என் தந்தை விரும்பினார். அவரது கனவை நனவாக்குவேன் என்கிறார் கலீப்.
இதே போல, பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட ஹிஸ்புல் முஜாகிதன் தளபதி புர்ஹன் வானியின் இளைய சகோதரர் மொஹம்மது நவீத் நல்ல மதிப்பெண்கள் எடுத்து +2 தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். 500க்கு 387 மதிப்பெண்கள் பெற்றுள்ள இவர் சாதனை படைத்துள்ளார்.
நவீத்தின் சகோதரர் புர்ஹன் வானி கொல்லப்பட்ட பிறகு எல்லைப் பகுதியில் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலை காரணமாக நடந்த தாக்குதல் சம்பவங்களில் 92 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். 12 ஆயிரம் பேர் காயமடைந்தனர். 2016ம் ஆண்டு ஜூலை மாதத்தில் இருந்து சுமார் 5 மாதங்களுக்கும் மேல் காஷ்மீரில் பதற்றமான சூழ்நிலை இருந்தது குறிப்பிடத்தக்கது.