தில்லியில் ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் அமெரிக்கப் பெண்ணிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக வெளிநாடு வாழ் இந்தியரை போலீஸார் கைது செய்தனர்.
இதுகுறித்து புது தில்லி கூடுதல் காவல் ஆணையர் பி.கே. சிங் கூறியதாவது: அமெரிக்காவைச் சேர்ந்த 52 வயது பெண் ஜனவரி 6-ஆம் தேதி தில்லி லுட்யன்ஸ் பகுதியில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் அறை எடுத்தார். அப்போது, அன்மோல் சிங் கர்பான்டா (25) என்பவருடன் நட்பு ஏற்பட்டது.
இந்நிலையில், ஜனவரி 8-ஆம் தேதி இருவரும் மது அருந்தினர்.
அப்போது, அப்பெண்ணுக்கு கர்பான்டா, போதை கலந்த பானத்தை குடிக்கக் கொடுத்து மானபங்கம் செய்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண், ஹோட்டல் அறையைக் காலி செய்துவிட்டு குருகிராமில் வேறு ஒரு ஹோட்டலில் சென்று தங்கினார்.
இந்நிலையில், ஜனவரி 10-ஆம் தேதி தில்லி காவல் துறையிடம் அப்பெண் புகார் அளித்தார். இதையடுத்து, வழக்குப் பதிவு செய்யப்பட்டு கர்பான்டா கைது செய்யப்பட்டார். விசாரணையில் அவர் வெளிநாடு வாழ் இந்தியர் என்பது தெரிய வந்தது என்று காவல் அதிகாரி பி.கே. சிங் தெரிவித்தார்.