தலைமை நீதிபதியின் இல்லத்துக்கு பிரதமரின் முதன்மைச் செயலர் சென்றது ஏன்? காங்கிரஸ் கேள்வி

பிரதமர் நரேந்திர மோடியின் முதன்மைச் செயலர் நிருபேந்திர மிஸ்ரா, தில்லியில் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவின் இல்லத்துக்குச் சென்றது ஏன்? என்று காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடியின் முதன்மைச் செயலர் நிருபேந்திர மிஸ்ரா, தில்லியில் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவின் இல்லத்துக்குச் சென்றது ஏன்? என்று காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.
தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தின் 4 மூத்த நீதிபதிகள் திடீரென்று வெள்ளிக்கிழமை போர்க்கொடி உயர்த்தினர். வழக்குகளை ஒதுக்குவதில் ஜனநாயக நெறிமுறைகளைக் கடைப்பிடிக்காமல், தலைமை நீதிபதி தன்னிச்சையாகச் செயல்படுவதாக அவர்கள் குற்றம் சாட்டினர்.
இந்நிலையில், தீபக் மிஸ்ராவின் இல்லத்துக்கு பிரதமர் மோடியின் முதன்மைச் செயலர் நிருபேந்திர மிஸ்ரா காரில் செல்லும் காட்சி தொலைக்காட்சிகளில் சனிக்கிழமை ஒளிபரப்பானது. ஆனால், தீபக் மிஸ்ராவின் வீட்டு வாசல் கேட் திறக்கப்படவில்லை. வீட்டுக்கு வெளியே சிறிது நேரம் நின்ற அந்தக் கார் பின்னர் திரும்பிச் சென்றுவிட்டது.
இந்தக் காட்சி ஒளிபரப்பான பிறகு, நிருபேந்திர மிஸ்ராவின் இந்தப் பயணத்துக்குப் பிரதமர் பதிலளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக, அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரண்தீப் சுர்ஜேவாலா தனது சுட்டுரைப் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
எண். 5, கிருஷ்ண மேனன் மார்க்கில் உள்ள தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவின் இல்லத்துக்கு பிரதமரின் முதன்மைச் செயலர் நிருபேந்திர மிஸ்ரா சென்றுள்ளார். தீபக் மிஸ்ராவின் இல்லத்துக்கு சிறப்புத் தூதுவரை (நிருபேந்திர மிஸ்ரா) பிரதமர் அனுப்பி வைத்தது ஏன்? இதற்கு பிரதமர் மோடி பதில் சொல்லியாக வேண்டும் என்று அந்தச் சுட்டுரைப் பதிவில் சுர்ஜேவாலா குறிப்பிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com