நாணயங்கள் தயாரிக்கும் பணியை தாற்காலிகமாக நிறுத்தி வைக்க உத்தரவிட்டிருந்த நிலையில், அதனை மீண்டும் தொடங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
எனினும், வழக்கத்தைவிட குறைவாக நாணயங்களை உற்பத்தி செய்யும்படி, இந்திய பாதுகாப்பு அச்சகம் மற்றும் நாணய உற்பத்தி நிறுவனத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்திய பாதுகாப்பு அச்சகம் மற்றும் நாணய உற்பத்தி நிறுவனத்தின் (எஸ்பிஎம்சிஐஎல்) கட்டுப்பாட்டில் செயல்படும் கொல்கத்தா, மும்பை, நொய்டா, ஹைதராபாத்திலுள்ள நாணய உற்பத்தி ஆலைகளில் நாணயங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
இந்நிலையில், சந்தைகளில் ஏற்பட்ட தேக்கம் மற்றும் புதிய நாணயங்களை வைப்பதற்கான இடப்பற்றாக்குறை காரணமாக, நாணயங்கள் தயாரிப்பை உடனடியாக நிறுத்தும்படி இந்திய நாணய உற்பத்தி நிறுவனத்துக்கு கடந்த 9-ஆம் தேதி மத்திய அரசு உத்தரவிட்டது. இதற்கு, நாணய உற்பத்தி தொழிற்சாலை ஊழியர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்தது.
இதைத் தொடர்ந்து, அனைத்து மதிப்பிலான நாணயங்கள் தயாரிக்கும் பணியை மீண்டும் தொடங்குமாறு, இந்திய நாணய உற்பத்தி ஆணையத்துக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. எனினும், இரு ஷிப்டுகளுக்கு பதிலாக, ஒரு ஷிப்டு மட்டும் தயாரிப்பு பணியை மேற்கொள்ளுமாறு அந்த உத்தரவில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.