மும்பை அருகே ஓஎன்ஜிசி நிறுவன அதிகாரிகளுடன் சென்ற ஹெலிகாப்டர், கடலில் விழுந்து சனிக்கிழமை விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் சிக்கி அதில் பயணித்த 7 பேரும் உயிரிழந்தனர்.
மும்பை கடற்கரையில் இருந்து 160 கிலோமீட்டர் தொலைவில், அரபிக் கடலில் ஓஎன்ஜிசியின் (எண்ணெய், இயற்கை எரிவாயு நிறுவனம்) எண்ணெய் கிணறு அமைந்துள்ளது.
இங்கு செல்வதற்காக, ஜுஹூ விமான தளத்தில் இருந்து பவான் ஹன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான ஹெலிகாப்டரில் 5 அதிகாரிகள் சனிக்கிழமை காலை 10.25 மணியளவில் புறப்பட்டனர்.
2 விமானிகள் உள்பட 7 பேருடன் புறப்பட்ட அந்த ஹெலிகாப்டர், கடல் பகுதியில் சென்றுக் கொண்டிருந்தபோது, திடீரென்று கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்து, மாயமானது. இதையடுத்து, ஹெலிகாப்டரை தேடும் பணிகள் தொடங்கப்பட்டன.
கடற்படையின் ஐஎன்எஸ் டெக் போர்க்கப்பலும், கண்காணிப்பு விமானமும் தேடுதல் பணியில் ஈடுபடுத்தப்பட்டன. கடலோர காவல் படை கப்பல்களும் தேடுதல் பணியில் ஈடுபட்டன. அப்போது, ஹெலிகாப்டரின் உடைந்த பாகங்கள் கடலில் மிதப்பது கண்டறியப்பட்டது.
மேலும், 4 பேரின் சடலங்களும் உடனடியாக மீட்கப்பட்டது. மீதமுள்ள 3 பேரையும் தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்தது. அப்போது மேலும் 2 பேரின் உடல்களும் கண்டறியப்பட்டன.
இந்நிலையில், 3-ஆவது நாளாக தொடர்ந்து நடைபெற்ற தேடுதல் பணியில் மீதமிருந்த ஒருவரின் உடலும் திங்கள்கிழமை மீட்கப்பட்டது. இந்த விபத்து தொடர்பாக, விமான விபத்து விசாரணை அமைப்பு (ஏஏஐபி) வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.