மகதாயி நதிநீர்ப் பங்கீட்டு விவகாரத்தில் கர்நாடகத்துக்கு அநீதி இழைக்கும் கோவா மாநில அரசை நீக்க வேண்டும் என்று கன்னட சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் வாட்டாள் நாகராஜ் தெரிவித்தார்.
பெங்களூரு மைசூரு வங்கி சதுக்கத்தில் செவ்வாய்க்கிழமை கோவா மாநில அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பிறகு செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
மகதாயி நதிநீர்ப் பங்கீட்டு விவகாரத்தில் கர்நாடகத்துக்கு கோவா மாநில அரசு அநீதி இழைத்து வருகிறது. அம்மாநில நீர்ப்பாசனத் துறை அமைச்சர் வினோத் பாலைக்கர் கன்னடர்களை இழிவாக பேசியுள்ளார். அவரை அமைச்சரவையிலிருந்து உடனடியாக நீக்க வேண்டும்.
கன்னடர்களை அவமானப்படுத்தியுள்ள அவர் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும். கர்நாடக மாநிலத்தில் உள்ள பெலகாவி மாவட்டத்திற்குள் வந்து அங்கு நடைபெறும் நீர்ப்பாசனத் துறை வளர்ச்சிப் பணிகளை பார்வையிட்டுள்ளார். இது அதிகார வரம்பை மீறிய செயலாகும்.
இந்திய இறையாண்மை மீறும் செயல்களில் கோவா மாநில அரசும், அம்மாநில அமைச்சரும் ஈடுபட்டு வருகின்றனர். எனவே, கோவா மாநில அரசு உடனடியாக நீக்க வேண்டும். மகதாயி நதிநீர்ப் பங்கீட்டு விவகாரத்தில் பிரதமர் உடனடியாக தலையிட வேண்டும். இதனை வலியுறுத்தி ஜன. 25-ஆம் தேதி மாநிலத்தில் முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளோம் என்றார்.
ஆர்பாட்டத்தில் ராஜ்குமார் ரசிகர் மன்றத் தலைவர் சா.ரா.கோவிந்து உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.