உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி சுற்றுப்பயணத்தின்போது தகராறில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டி, காங்கிரஸ் கட்சியின் சட்டமேலவை உறுப்பினர் தீபக் சிங் உள்ளிட்டோர் மீது 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி, உத்தரப் பிரதேசத்தின் சில பகுதிகளில் திங்கள்கிழமை சுற்றுப்பயணம் செய்தார். சலோன் பகுதியில் ராகுல் காந்தி வந்தபோது, அங்கிருந்த காங்கிரஸாருக்கும், போலீஸாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதேபோல், காங்கிரஸாருக்கும் அப்பகுதி மக்களுக்கும் இடையேயும் கைகலப்பு ஏற்பட்டது. இதில் ஏராளமானோர் காயமடைந்ததாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக சலோன் காவல்நிலையத்தில் தீபக் சிங் உள்ளிட்டோருக்கு எதிராக 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில் ஒரு வழக்கு, சலோன் பகுதியைச் சேர்ந்த நிர்மல் என்பவர் அளித்த புகாரின்பேரில் பதிவு செய்யப்பட்டுள்ளது. மற்றோர் வழக்கு, சலோன் காவல்நிலைய பொறுப்பாளர் அளித்த புகாரின்பேரில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்திய தண்டனையியல் சட்டத்தின் 147ஆவது பிரிவு (கலவரத்தில் ஈடுபடுதல்), 323 (வேண்டுமென்று காயத்தை ஏற்படுத்துதல்), 504 (அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தும் உள்நோக்கத்துடன் அவமதிப்பு செய்தல்) உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.