ஸ்விட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் வரும் 22-ஆம் தேதி தொடங்கும் உலகப் பொருளாதார மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றுகிறார்.
இது தொடர்பாக மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் (பொருளாதார உறவுகள்) செயலாளர் விஜய் கோகலே, தில்லியில் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
டாவோஸில் வரும் 22-ஆம் தேதி உலகப் பொருளாதார மாநாடு தொடங்குகிறது. 5 நாள்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் 70 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர். உலக வங்கி, சர்வதேச செலாவணி நிதியம் (ஐஎம்எஃப்), உலக வர்த்தக அமைப்பு (டபிள்யூடிஓ) ஆகியவற்றின் தலைவர்கள், 38 பன்னாட்டு நிறுவனங்களின் தலைவர்களும் இதில் பங்கேற்கின்றனர்.
22-ஆம் தேதி நடைபெறும் தொடக்க நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்ற இருக்கிறார். 1997-ஆம் ஆண்டுக்குப் பிறகு டாவோஸ் செல்லும் முதல் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிதான். அவர் அங்கு சுமார் 24 மணி நேரம் மட்டுமே இருப்பார்.
உலகப் பொருளாதார மாநாட்டில் மோடி உரையாற்றுவது மிகவும் முக்கியமான நிகழ்வாகும். ஏனெனில், இந்தியாவில் மேற்கொள்ளப்பட்டு வரும் பொருளாதாரச் சீர்திருத்த நடவடிக்கைகள் உலக நாடுகளை வெகுவாகக் கவர்ந்துள்ளன. வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார சக்தியான இந்தியா, முதலீடுகளை அதிகம் ஈர்க்கும் முன்னணி நாடாகவும் உள்ளது.
இந்தப் பயணத்தின்போது ஸ்விட்சர்லாந்து அதிபர் அலைன் பெர்செட் உள்ளிட்ட தலைவர்களை மோடி சந்தித்துப் பேச இருக்கிறார். ஆனால், இதே மாநாட்டில் பங்கேற்கும் பாகிஸ்தான் பிரதமர் ஷாகித் ககான் அப்பாஸியை மோடி சந்தித்துப் பேச மாட்டார் என்றார் விஜய் கோகலே.
உலகப் பொருளாதார மாநாட்டின் தொடக்க நாளில் பிரமாண்டமான இரவு விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில், சர்வதேச அளவில் முன்னிலையில் உள்ள 60 பெரு நிறுவனங்களின் தலைவர்கள், அதிகாரிகள் பங்கேற்கின்றனர். இதில் 20 நிறுவனங்கள் இந்தியாவைச் சேர்ந்தவையாகும்.
மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி உள்பட 6 மத்திய அமைச்சர்களும் உலகப் பொருளாதார மாநாட்டில் பங்கேற்க இருக்கின்றனர். ஜேட்லி 24-ஆம் தேதி உரையாற்ற இருக்கிறார்.