மத்திய பட்ஜெட்டில் விவசாயக் கடனுக்கான இலக்கு முன்னெப்போதும் இல்லாத வகையில் ரூ.11 லட்சம் கோடியாக நிர்ணயிக்கப்படும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
2018-19-ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் பிப்ரவரி 1-ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. இதில் வேளாண் துறைக்கு கூடுதல் முன்னுரிமை அளிக்கப்பட இருக்கிறது. அதன்படி, நாட்டின் வேளாண் உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் விவசாயக் கடனுக்கான இலக்கு ரூ.11 லட்சம் கோடியாக உயர்த்தப்பட இருப்பதாகத் தெரிகிறது.
நடப்பு நிதியாண்டில் விவசாயக் கடன் இலக்கு ரூ.10 லட்சம் கோடியாக இருந்தது. இதில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வரை ரூ.6.25 லட்சம் கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. வழக்கமாக விவசாயக் கடன்களுக்கு 9 சதவீத வட்டி வசூலிக்கப்படும். ஆனால், விவசாயிகளுக்கு மேலும் சலுகை அளிக்கும் வகையில் ரூ.3 லட்சம் வரையிலான குறுகியகால விவசாயக் கடன்களுக்கு 7 சதவீத வட்டியில் கடன் அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், கடனை உரிய நேரத்தில் திருப்பிச் செலுத்திவிட்டால், மேலும் 3 சதவீதம் தள்ளுபடி செய்யப்பட்டு, மிகக்குறைந்த அளவாக 4 சதவீத வட்டி மட்டுமே வசூலிக்கப்படுகிறது.
பொதுத்துறை வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், வட்டார கிராம வங்கிகள் ஆகியவை அதிக அளவில் விவசாயக் கடன்களை அளிக்கின்றன. அவற்றில் கூட்டுறவு மற்றும் கிராம வங்கிகள் 'நபார்டு' வங்கி உதவியுடனும் விவசாயக் கடன்களை அளிக்கின்றன. நடப்பு நிதியாண்டில் அனைத்து விவசாயக் கடன் வங்கிக் கணக்குகளும் ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளன.