ஹிமாசலப் பிரதேச முன்னாள் முதல்வர் வீரபத்ர சிங் தொடர்புடைய சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில், வரும் பிப்ரவரி மாதம் 1-ஆம் தேதிக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என்று அமலாக்கத் துறைக்கு தில்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பான வழக்கு, தில்லி சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி சந்தோஷ் ஸ்நேகி மான் முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது இந்த விவகாரம் தொடர்பாக நடத்தி வரும் விசாரணை நிலவரம் தொடர்பான அறிக்கையை அமலாக்கத் துறை அதிகாரிகள் தாக்கல் செய்தனர். இதை நீதிபதி பதிவு செய்து கொண்டார். இதையடுத்து நீதிபதி சந்தோஷ் கூறியபோது, அமலாக்கத் துறைக்கு விசாரணை நடத்த அதிக காலஅவகாசம் ஏற்கெனவே அளிக்கப்பட்டு விட்டதாக குறிப்பிட்டார். இதையடுத்து, வரும் பிப்ரவரி மாதம் 1ஆம் தேதிக்குள் இந்த விவகாரத்தில் அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.
முன்னதாக, அமலாக்கத் துறை தாக்கல் செய்திருந்த விசாரணை நிலவர அறிக்கையில், வழக்குத் தொடர்பாக ஏராளமான சாட்சிகளின் வாக்குமூலங்களை அண்மையில் பதிவு செய்திருப்பதாகவும், வங்கி பரிவர்த்தனைகள் குறித்து விசாரணைகள் நடத்தியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதுகுறித்து அமலாக்கத் துறை வட்டாரங்கள் கூறுகையில், 'வீரபத்ர சிங், அவரது மனைவி பிரதீபா சிங் ஆகியோரின் வாக்குமூலத்தையும் அமலாக்கத் துறை பதிவு செய்துள்ளது' என்றன.
மத்திய அமைச்சராக வீரபத்ர சிங் பதவி வகித்தகாலத்தில் வருமானத்துக்கு அதிகமாக ரூ.10 கோடி அளவுக்கு சொத்துகளை சேர்த்ததாக சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. இதை அடிப்படையாகக் கொண்டு, அமலாக்கத் துறையும் சட்டவிரோத பணப்பரிவர்த்தனைச் சட்டத்தின்கீழ் தனியே வழக்குப்பதிவு செய்தது.